Pages

Subscribe:

Ads 468x60px

Wednesday, 11 December 2013

பழந்தமிழர்களின் விநோத தண்டனைகள்!



சங்க காலத் தமிழகத்திலும் அதற்குப் பின்னரும் விநோதமான தண்டனைகள் வழக்கத்தில் இருந்தன. அரசன், போரில் வெற்றி பெற்றால் தோல்வியுற்ற மன்னர்களின் ஊரைத் தீக்கிரையாக்குவது, அவன் மனைவியரின் கூந்தலை அறுத்துக் கயிறு திரிப்பது, தோல்வியடைந்த மன்னரின் திருமுடிகளை அல்லது மகுடங்களை உருக்கிக் காலடியில் பலகையாகப் போடுவது, தோற்ற மன்னரின் அரண்மனையை இடித்துத் தரைமட்டமாக்கி அவ்விடத்தில் கழுதை பூட்டிய ஏரால் உழுவது, யவனர் போன்ற வெளிநாட்டினர் பிடிபட்டால் அவர்கள் தலையை மொட்டையடித்து நெய்யை ஊற்றி அவமதிப்பது, பெண்ணைத் திருமணம் செய்யவில்லை என்று பொய் சொன்னவனை மரத்தில் கட்டிச் சாம்பல் பூசுவது, மாற்று மன்னர்களின் குழந்தைகளை யானையின் காலால் இடறச் செய்து கொல்வது, ஒற்றர்களுக்கு மரண தண்டனை அளிப்பது, கொலைத் தண்டனை கிடைத்தோருக்குச் செம்மாலைகளை அணிவிப்பது - இப்படி எத்தனையோ விசித்திரமான வழக்கங்களைக் காண முடிகிறது.


1. சிறுமிக்கு மரண தண்டனை


சங்க இலக்கியத்தில் மிகவும் கொடுமையான செய்தி, ஒரு சிறுமிக்கு மரண தண்டனை கொடுத்ததாகும். நன்னன் என்ற கொடுங்கோலன் ஆட்சியில் இது நடந்தது. இதனால் அவனைக் கண்டித்த பரணர் போன்ற புலவர்கள் அவன் பரம்பரையில் வந்த மன்னர்களைக் கூடப் பாட மறுத்து விட்டனர். பெண் கொலை புரிந்த நன்னன் மரபில் வந்த இளம் விச்சிக்கோ என்ற மன்னனைப் பாட மறுத்து விட்டார் பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் (புறம் 151).

நன்னன் என்பவன் பூழி நாட்டையாண்ட (கேரளாவின் ஒரு பகுதி) ஒரு சிற்றரசன். நன்னனது தோட்டத்திலுள்ள மரத்திலிருந்து விழுந்த மாங்காய் ஒரு கால்வாயில் மிதந்து வந்தது. அதனை அங்கு நீராடச் சென்ற ஒரு பெண் எடுத்துத் தின்று விட்டாள். உடனே அப்பெண்ணுக்கு மரண தண்டனை விதித்தான் நன்னன். இதை எதிர்த்த நல்லோர் அனைவரும் கொதித்து எழுந்தனர். அப்பெண்ணின் நிறைக்கு நிறை (துலாபாரம்) தங்கம் தருவதாகவும், 81 யானைகள் தருவதாகவும் பெண்ணின் தந்தை கெஞ்சிப் பார்த்தார். ஆனால் ஈவு இரக்கமற்ற நன்னன் அப்பெண்ணின் மரண தண்டனையை நிறைவேற்றினான். இதைப் பரணர் குறுந்தொகைப் பாடலில் (292) விரிவாக எடுத்துரைக்கிறார்.


2. எடைக்கு எடை தங்கம்


அரசனுக்குத் தீங்கிழைப்பவர் அவர்களுடைய நிறைக்குத் தங்கத்தால் உருவம் (பாவை) செய்து கொடுப்பது அக்கால மரபு. இதைக் குறுந்தொகையிலும் (பாடல் 292) பெருங்கதையிலும் காணலாம்.

2300 ஆண்டுகளுக்கு முன் வடமொழியில் நாடகம் எழுதிய பாஷை என்ற அறிஞன் 'தூத வாக்ய' என்ற அவனது நாடகத்தில் ஒரு சுவையான சம்பவத்தைக் கூறுகிறான். பாண்டவர்க்காகக் கிருஷ்ணன் தூது வருகிறார் என்று அறிவிக்கப்பட்டவுடன், சபைக்குள் கிருஷ்ணன் நுழைகையில் எவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செய்யக் கூடாதென்றும் அப்படி எழுந்து நிற்போருக்கு 12 தங்கக் காசு அபராதம் என்றும் துரியோதனன் கூறுகிறான். ஆனால் கிருஷ்ணன் சபைக்குள் நுழையும் போது துரோணர், பீஷ்மர், விதுரன் போன்ற பெரியவர்களும் கூட அவர்களை அறியாமலே எழுந்து நிற்கின்றனர். துரியோதனனோ ஆசனத்திலிருந்து கீழே விழுகிறான்!! அரசன் கட்டளையை மீறும் அமைச்சருக்கு 12 பொற்காசு தண்டனை என்பது இதில் குறிப்பிடத்தக்கது.
   
3. பெண்கள் முடியில் கயிறு திரித்தல்


சங்க கால மன்னர்கள், அவர்களிடம் தோற்றுப் போன அரசனின் மனவியரை இழுத்து வந்து அவர்களுடய தலைமுடியைச் சிரைத்து அதிலிருந்து கயிறு திரித்து அக் கயிற்றால் பகையரசரின் யானையப் பிடித்து இழுத்து வந்தனர். நன்னன் என்ற கொடுங்கோலரசன் இப்படிச் செய்ததைப் பரணர் என்னும் புலவர் நற்றிணைப் பாடலில் (270) குறிப்பிட்டுக் கண்டித்துள்ளார்.

4. பாவங்களுக்குப் பரிகாரம் (கழுவாய்)

பசு மாட்டின் மடியினை அறுத்தவர்க்கும், பெண்களின் கருவைச் சிதைத்தவர்க்கும், பார்ப்பனர்களுக்குக் கொடுமை செய்தவர்களுக்கும் பரிகாரம் (கழுவாய்) உண்டு. ஆனால் செய்ந்நன்றி கொன்றவர்க்குக் கழுவாயே இல்லை என்று ஆலத்தூர்க் கிழார் (புறம் 34) என்ற புலவர் பாடுகிறார். இதே கருத்தை வால்மீகி ராமாயணத்திலும் பஞ்ச தந்திரக் கதைகளிலும் காண்கிறோம்.

இதிலிருந்து அக்காலத்தில் சில குற்றங்கள் இருந்ததையும் அதற்குப் பரிகாரமாகக் கடுமை குறைந்த தண்டனைகள் அளிக்கப்பட்டதையும் அறிகிறோம்.

புறம் 34-வது பாடலில் மூன்றாவது வரியில் பார்ப்பனர் (அந்தணர்கள்) என்ற சொல்லைச் சில புதிய பதிப்புக்களில் குரவர் (அறிஞர்/ஆசிரியர்) என்று திருத்தியுள்ளனர். இது சரியில்ல என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. பசுவையும், பார்ப்பனரையும் அடுத்தடுத்துக் கூறுவது சங்க இலக்கிய மரபு. எட்டுத் தொகையிலும் பத்துப் பாட்டிலும் ஏராளமான இடங்களில் பசு-பார்ப்பனை என்ற சொற்றொடர் வருகிறது. இது வடமொழி இலக்கியங்களில் வரும் 'கோப்ராம்மணஸ்ய' என்ற சொற்றொடரின் மொழி பெயர்ப்பு. கண்ணகி மதுரை நகரைத் தீக்கிரையாக்கிய போது பசு, பெண்டிர், பார்ப்பனர் உள்ள பக்கம் எரியக் கூடாது என்று அக்கினி தேவனுக்குக் கட்டளையிடுகிறாள். ஞானசம்பந்தரும் வாழ்க அந்தணர், வானவர், ஆவினம் என்று பாடுகிறார்.


5. ஊரைத் தீக்கிரையாக்குதல்


பழந்தமிழர்கள் செய்த பெரிய தவறுகளில் ஒன்று பகையரசர்களின் ஊரைத் தீக்கிரையாக்குவதாகும். இதனால் வரலாற்றுத் தடயங்கள் ஏதுமின்றி, இன்று நாம் தவிக்கிறோம். சங்க இலக்கியத்தில் நிறைய இடங்களில் இப்படித் தீக்கிரையாக்கப்பட்டுப் பகையரசர்களின் ஊர்கள் பாழாய்ப் போனதையும் அவ்விடங்களில் ஆந்தையும் கூகையும் அலறுவதையும் படித்தறிகிறோம். தனி ஒருத்திக்கு இழைக்கப்பட்ட தீங்கிற்காக மதுரை நகரையே கண்ணகி தீக்கிரையாக்கியதைச் சிலப்பதிகாரம் அறிவிக்கிறது.



6. கழுதை ஏர் பூட்டி உழுவது


அதியமான் அஞ்சியின் மகன் பொருட்டெழினியைப் புகழ்ந்து பாடிய ஒளவையார் (புறம் 39) ''திறை கொடாத மன்னனின் மதில்களை வஞ்சனையின்றி அழித்துக் கழுதை பூட்டி உழுது வரகும் கொள்ளும் விதைக்கும் மன்னன்'' என்று கூறுகிறார். இவ்வாறு எதிரியின் நிலத்தைக் கழுதை கொண்டு உழுவதைக் கி.மு. முதல் நூற்றாண்டில் ஒரிஸ்ஸாவை ஆண்ட காரவேலன் என்ற கலிங்க மன்னனும் அவனுடய கல்வெட்டில் கூறுகிறான். ஆக இது பரவலாக இருந்த வழக்கம் என்று தெரிகிறது. சிலப்பதிகாரத்தில் நீர்ப்படக் காதையில் மருதப் பண்ணிலும் கழுதை பூட்டிய ஏரால் உழுது வரகு பயிரிடுவது  குறிப்பிடப்பட்டுள்ளது.


7. தோற்ற மன்னர்களைச் சிறையில் அடைப்பது


சோழன் செங்கணானோடு சேரமான் கணக்கால் இரும்பொறை போர் புரிந்தான். இதில் இரும்பொறை தோற்றான். உடனே இரும்பொறையைச் சிறைப் பிடித்துக் குடவாயில் கோட்டத்துச் சிறையில் அடைத்தான். தண்ணீர் தா என்று கேட்ட போது காவலாளி தண்ணீர் கொண்டு வரத் தாமதித்ததால் சேரன் அவமானம் தாளாது உயிர் துறந்தான் (புறம் 74).


8. கண்களைப் பறித்துத் தண்டனை

பயறு விளைந்த ஒரு நிலத்தில் ஒரு பசு மேய்ந்ததற்காகப் பசுவின் சொந்தக்காரர் ஒருவரின் கண்களைப் பறித்தனர் கோசர்கள். ஊர் மன்றத்தில் இந்தக் கடும் தண்டனை பற்றிக் கோசர்கள் முடிவு செய்தனர். கண்களை இழந்த தந்தைக்கு நியாயம் கிடக்கும் வரை நோன்பு இருக்க அவனுடைய மகள் அன்னிமிஞிலி முடிவெடுத்தாள். உண்கலத்தில் உண்ண மாட்டேன் என்றும் புத்தாடைகளை உடுக்க மாட்டேன் என்றும் உறுதி எடுத்தாள். பின்னர் குதிரைப் படைத் தலைவனான திதியன் என்பவனிடம் சென்று கோசர்களைப் பழி வாங்கும் படி முறையிட்டாள். திதியனும் படையெடுத்துச் சென்று கோசர்களைக் கொன்றான். அன்னிமிஞிலி சினம் தணிந்து உடல் பூரித்து நின்றாள். இந்தச் செய்தியை (அகம் 262, 196) பரணர் நமக்கு அழகிய கவிதையில் தெரிவிக்கிறார். இதைப் படிக்கையில் மதுரையை எரித்த கண்ணகியும், துரியோதனின் தொடையைப் பிளந்த போது மகிழ்ந்த திரௌபதியும் நம் மனக்கண் முன் வருகின்றனர்.


9. பல்லைப் பிடுங்கிக் கதவில் புதைத்தது


அகநானூறு 211-வது பாடலில் புலவர் மாமூலனார் நமக்கு ஒரு செய்தியைத் தெரிவிக்கிறார்:

யானை பிடிக்க வருமாறு அனைத்துப் படைத் தலைவர்களுக்கும் சோழ மன்னன் உத்தரவிடுகிறான். அரச நெறிகளை அறியாத எழினி என்பவன் மட்டும் வரவில்லை. உடனே மத்தி என்ற படைத் தலைவனைச் சோழன் அனுப்புகிறான். அவன் எழினியை எளிதில் கொன்று விடுகிறான். அத்தோடு நில்லாமல் எழினியின் பல்லை எடுத்து வந்து 'பெண்மணி வாயில்' என்னும் கோட்டை வாயிலில் கதவில் அழுத்தி வைக்கிறான். இதே புலவர் மாமூலனார் பாடல் 197-ல் கண்ணன் எழினி என்று ஒருவரைக் குறிப்பிடுகிறார். அவனுடய மகன் தான் பல்லைப் பறி கொடுத்த எழினியோ அல்லது இருவரும் ஒருவரா என்று தெரியவில்லை.

பல்லையும், கண்ணையும் பறித்த சம்பவங்களைப் பார்க்கையில் பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்ற பாபிலோனிய மன்னன் ஹமுரபியின் நீதியை இவர்கள் பின்பற்றினர் போலும்!

புத்தரின் பல்லையும் முகம்மது நபியின் முடியையும் பாக்தாத் வழிபாட்டுத் தலங்களில் வைத்திருப்பதை நாம் அறிவோம். ஆனால் அவை அவர்களின் மீதுள்ள மதிப்பின்பால் செய்யப்பட்டவை. இங்கே எழினியை அவமதிப்பதற்காக மத்தி அப்படிச் செய்தான்.


10. தலை கொண்டு வந்தால் பரிசு


குமணனுக்கும் அவன் தம்பி இளங்குமணனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு, குமணனைக் காட்டிற்கு விரட்டினான் இளங்குமணன். அத்தோடு நில்லாமல் அவன் (குமணனின்) தலையைக் கொண்டு வருபவருக்கு பரிசு என்றும் இளங்குமணன் அறிவித்தான். பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் காட்டிற்குச் சென்று, குமணனைப் பாடினார். ஆனால் குமணன் கானகத்தில் வாழ்ந்ததால் அவர் கையில் பரிசு கொடுப்பதற்குப் பொருள் ஏதும் இல்லை. தன் இடுப்பிலிருந்த வாளை உருவிப் புலவர் கையில் கொடுத்தான். இதனால் என் தலையை வெட்டி எடுத்துச் செல்லுங்கள். உங்களுக்கு என் தம்பி பரிசு தருவான் என்று தன் இன்னுயிரையும் தியாகம் செய்ய முன்வந்தான் குமணன். ஆனால் புலவர் சாத்தனாரோ பெரும் அறிவாளி. கையில் வாளை வாங்கிக் கொண்டு ஒரு செவ்வாழை மரத்தை வெட்டி வாழைத் தண்டைத் துணியில் சுற்றிக் கொண்டு இளங்குமணனிடம் வந்தார். அவரைப் பார்த்த இளங்குமணன் அண்ணன் தலையோ எனத் திடுக்கிடவே புலவர் உண்மையைக் கூறி அவர்களை ஒன்று படுத்தினார்.

இதைப் புறநானூறு 165-ம் பாடலில் ஓரளவு அறிய முடிகிறது. ஏனைய கதையை உரை மூலமே அறிகிறோம். ஆனால் பகைவனின் தலைக்குப் பரிசுப் பணம் கொடுக்கும் வழக்கம் அக்காலத்திலேயே இருந்தது என்பது இதில் தெளிவாகிறது.


11. யானையின் காலால் இடறிக் கொல்லுதல்
தற்காலத்தில் தூக்குத் தண்டனை, மின்சார நாற்காலி, விஷ ஊசி போன்றவை மூலம் மரண தண்டனை அளிக்கப்படுகிறது. பழந்தமிழகத்தில் கழுவேற்றுதல், யானையின் காலால் தலையை இடறிக் கொல்லுதல், வாளால் வெட்டிக் கொல்லுதல், சுண்ணாம்புக் காளவாயில் போடுதல் முதலிய மரண தண்டனை முறைகள் இருந்தன. பகை மன்னனின் குழந்தைகளையும் கூட இப்படி இரையாக்க முயன்றதைப் புறநானூறு (46) மூலம் அறிகிறோம்.

மலையமான் மகன்களை யானையின் கால்களால் நசுக்கிக் கொல்லுமாறு சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் உத்தரவிடுகிறான். அது கண்டு வருந்திய கோவூர்க்கிழார் என்ற புலவர், ''சோழ மன்னனே! ஒரு புறாவின் உடலைக் காப்பதற்காகத் தன்னையே பருந்துக்கு ஈந்த செம்பியன் (சிபிச் சக்கரவர்த்தி) பரம்பரையில் வந்தவன் நீ. இந்தச் சிறுவர்களோ கொல்ல வரும் யானையை, அது தீங்கு செய்யப் போகிறது என்பதைக் கூட உணராமல், அதைக் கண்டு மகிழும் இளம் வயதினர்.

பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகள் இவர்கள். நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். இனி உன் விருப்பம்'' என்று கூறினார். இதைக் கேட்ட சோழ மன்னன் மனம் மாறி மலையமான் புதல்வர்களை விடுதலை செய்தான் என்பது வரலாறு. இவ்வாறு யானையை விட்டு ஆட்களைக் கொல்லுவதைப் பிற்கால வரலாற்றிலும் காண முடிகிறது.

அப்பரைக் கொல்வதற்காக ஏவப்பட்ட யானை, அவரை வணங்கிச் சென்றது.


12. ஒற்றர்களுக்கு மரண தண்டனை


பழந்தமிழகத்தில் ஒற்றர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டதைக் கோவூர்க்கிழாரின் (புறம் 47) பாடல் மூலம் அறிய முடிகிறது. சோழ மன்னர்கள் நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே சண்டை.

இந்நேரத்தில் நலங்கிள்ளியைப் பார்த்துவிட்டு இளம் தத்தன் என்ற புலவன் உறையூருக்கு வருகிறான். அவனை ஒற்றாட வந்தவன் என்று கருதிக் கொல்லும் படி உத்தரவிடுகிறான் நெடுங்கிள்ளி. உடனே கோவூர்க்கிழார் தலையிடுகிறார்.

''மன்னனே! பறவைகள் பழ மரத்தை நாடி ஓடுவது போலப் பரிசிலரைத் தேடி ஓடுவது புலவர் வாழ்க்கை. தாமும் உண்டு பிறரையும் உண்ணச் செய்வதேயன்றி எவருக்கும் தீங்கு செய்யாதார் இவர்கள்'' என்றார். இதைக் கேட்ட மன்னன், புலவர் இளம் தத்தனை விடுதலை செய்தான்.


13. பொய் சொன்ன கணவனுக்கு முகத்தில் கரி


ஒருவன் ஒரு பெண்ணைக் கள்ளத்தனமாகத் திருமணம் செய்துவிட்டுப் பின்னர் பிரிந்து சென்று விடுகிறான். அப்பெண் ஊர் மக்களிடம் முறையிடவே அவர்கள் உண்மையை விசாரித்துத் தவறிழைத்த ஆடவனை மரக்கிளையில் கட்டித் தொங்க விட்டு முகத்தில் சாம்பலைப் பூசுகின்றனர். இந்தச் செய்தியை அகநானூறு தெரிவிக்கிறது.

முற்காலத்தில் தவறு செய்தவர்களைக் கழுதை மீது ஏற்றி வைத்து மொட்டையடித்துக் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி ஊர்வலம் விடும் வழக்கமும் இருந்தது.


14. மனு நீதிச் சோழன்

சோழ மன்னர் பரம்பரையில் தோன்றிய 2 மன்னர்களைத் தமிழ் இலக்கியம் அடிக்கடி மேற்கோள் காட்டிப் பேசுகிறது. ஒருவர் புறாவுக்குத் தன் சதையை வெட்டிக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தி. மற்றொருவர் ஒரு பசு மாட்டின் முறையீட்டின் பேரில் மகனையே தேர்க்காலில் இட்ட மனுநீதிச் சோழன்.

மனுநீதிச் சோழனின் மகன் ஓட்டிச் சென்ற தேரானது ஒரு கன்றின் மீது ஏறி அதைக் கொன்று விட்டது. கன்றை இழந்த பசு உடனே மன்னனின் கோட்டை வாயிலுக்குச் சென்று அங்கு கட்டி விடப்பட்டிருந்த ஆராய்ச்சி மணியினை அடித்தது. பசுவின் துயரத்தை அறிந்த சோழ மன்னன், அமைச்சரை அழைத்து, கன்று இறந்தது போலவே தனது மகனையும் தேர்க்காலில் இட்டுக் கொல்லும் படி உத்தரவிட்டான்.

பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்னும் ஹமுராபியின் சட்டமே மனுவின் ஸ்மிருதியிலும் இருந்ததாகத் தமிழர் நம்பி, அந்தச் சோழனுக்கு மனுநீதிச் சோழன் என்று பெயரிட்டனர்.

''அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்'' என்று சிலப்பதிகாரமும் ''மகனை முறை செய்த மன்னவன்'' என்று மணிமேகலையும் மனுநீதிச் சோழனைப் புகழ்ந்து பேசுகின்றன.

இலங்கையின் வரலாற்றை விரிவாகக் கூறும் மகாவம்சம் என்ற நூலும் (21 வது அத்தியாயம்) மனுநீதிச் சோழன் கதையைக் குறிப்பிடுகிறது. ஏலாரா (ஏழாரன்) என்ற சோழ மன்னன் இலங்கையை 44 ஆண்டுகளுக்கு நீதி நெறி தவறாமல் ஆண்டான் என்றும் அப்பொழுது இது நடந்தது என்றும் மகாவம்சம் கூறுகிறது. அவன் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன்.



15. ஆராய்ச்சி மணி

தமிழ் மன்னர்கள் நீதிநெறி தவறாது ஆட்சி புரிந்தனர். ஆயினும் எங்கேனும் நீதி தவறினால் மன்னரைக் காண நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. கோட்டை வாயிலில் தொங்க விடப்பட்டுள்ள ஆராய்ச்சி மணியை எவரும் வந்து அடிக்கலாம். மன்னன் ஓடோடி வந்து நீதி வழங்குவான்.

கணவனை இழந்த கண்ணகி மதுரை நகரைத் தீக்கிரையாக்கிய பின்னரும், ஆத்திரமும் வருத்தமும் தணியாமல் நின்றாள். மதுரையின் காவல் தெய்வமாகிய மதுராபதி அவள் முன் தோன்றிப் பாண்டிய மன்னனின் செங்கோல் ஆட்சியை எடுத்துரைக்கிறாள்:

''மறை நா ஓசை அல்ல தியாவதும்
மணி நா ஓசை கேட்டதும் இலனே''
(சிலப்பதிகாரம் கட்டுரைக் காதை)


பாண்டிய மன்னரின் ஆட்சியில் அந்தணர்கள் ஓதும் வேதத்தைத் தான் அவன் காதுகள் கேட்டுப் பழகியிருக்கின்றன. இது வரை அவன் ஆட்சியில் எவரும் ஆராய்ச்சி மணியை அடித்துக் கேட்டதேயில்லை என்று மதுராபதித் தெய்வம் கூறுகிறது.

நீதிநெறி தவறாத ஏலாரா (ஏழாரன்) என்ற சோழ மன்னனின் ஆட்சியைப் புகழும் மகாவம்சமும் இந்த ஆராய்ச்சி மணி பற்றிக் குறிப்பிடுகிறது (21-வது அத்தியாயம்)
   

16. பொற்கைப் பாண்டியன்



சிலப்பதிகாரம் பொற்கைப் பாண்டியன் என்ற மன்னரின் சுவையான கதை ஒன்றையும் கூறுகிறது (கட்டுரைக் காதை).

கீரந்தை என்ற பார்ப்பனன் ஒருவன் ஒருநாள் வேற்றூர் செல்ல நேரிட்டது. அப்போது பாண்டிய மன்னன் அவ்வீட்டைக் காவல் காத்தான். அப்போது ஒரு நாள் இரவு நேரத்தில் அரவம் கேட்கவே அந்த வீட்டின் கதவைப் பாண்டியன் தட்டினான். "பாண்டியன் காவல் இருப்பதால் ஒன்றும் நிகழா என்று கூறி என்னை விட்டுவிட்டுச் சென்று விட்டாரே என் கணவன்" என்று கீரந்தையின் மனைவி புலம்பினாள். மன்னன் இதைக் கேட்டுத் திகைத்து, எல்லார் வீட்டுக் கதவுகளையும் தட்டி விட்டுச் செல்வோம். அப்போது தான் இப்பெண் அஞ்சாமல் இருப்பாள் என்று கருதிப் பலர் வீடுகளின் கதவுகளையும் தட்டிவிட்டுச் செல்கிறான். மறு நாள் அந்தத் தெருவைச் சேர்ந்த அந்தணர்கள் அனைவரும் அரசனிடம் முறையிடவே அரசன் தானே அத்தவறைச் செய்தவன் என்று கூறித் தனது வாளால் தன் கையை வெட்டிக் கொள்கிறான். பின்னர் அரசவை மருத்துவர்கள் அவனுக்கு பொற்கையைப் பொருத்தியதால் பொற்கைப் பாண்டியன் (GOLDEN HAND) என்று பெயர் பெறுகிறான்.

எந்த உறுப்பைக் கொண்டு ஒருவன் தவறு இழைக்கிறானோ அந்த உறுப்பை வெட்டி நீதி வழங்குவது பழந்தமிழர் கண்ட முறை போலும்.

பதிணென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழியிலும் (எனக்குத் தகைவன்றால்....) இந்தச் சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது.

   
17. நரைமுடி தரித்து நீதி வழங்கல்



பிரிட்டன் போன்ற மேலை நாடுகளில் இன்றும் கூட நீதிபதிகள் நரைமுடி தரித்துத் தான் நீதி வழங்குகின்றனர். இந்த வழக்கத்தைக் கரிகால் சோழன் தான் துவக்கி வைத்தான் போலும்.

சோழ மன்னரின் தலைநகராக விளங்கிய உறையூரில் இருந்த அறங்கூறு அவையம் மிகவும் புகழ் பெற்றது. ஒருநாள் இரு முதியவர்கள் நீதி வேண்டிச் சோழனின் அரசவைக்கு வந்தனர். ஆனால் வழக்கைக் கேட்கவுள்ள கரிகாலனின் இளம் வயதைக் கண்டு இவரால் சரியான தீர்ப்புக் கூற முடியாதென எண்ணித் தயங்கினர். அவர்களுடய ஏமாற்றத்தை உணர்ந்த கரிகால் சோழன் அவர்களை மறுநாள் வரும்படிக் கூறி, அன்று ஒரு முதியவர் அவைநீதி வழங்குவார் என்றும் சொன்னான்.

மறு நாள் அவர்கள் அவைக்கு வந்த பொழுது கரிகாலனே நரைமுடி தரித்து முதியோர் போல வேடம் அணிந்து வந்து தீர்ப்புக் கூறினான். முதியோர் இருவரும் அந்தத் தீர்ப்பைப் பாராட்டினர். இச் செய்தியைப் பொருநராற்றுப் படை, மணிமேகலை, பழமொழி ஆகிய நூல்கள் எடுத்துக் காட்டியுள்ளன.

   
   
18. யவனர் தலையில் எண்ணெய் தடவி அவமதித்தது



பதிற்றுப் பத்து என்னும் நூலில் குமட்டூர் கண்ணனார் பாடிய இரண்டாம் பத்து நமக்கு ஒரு புதிய செய்தியைத் தருகிறது.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற மன்னன், இனிமையற்ற கடுஞ்சொற்களை உடைய யவனர்களைச் சிறைப்படுத்தி, அவர்கள் தலையில் நெய்யினை ஊற்றி, கைகளைப் பின்னால் கட்டி அவமதித்தான். பின்னர் அவர்களிடமிருந்த விலைமிக்க அணிகலன்களையும், உயர்ந்த வைரங்களையும் பெற்று அவர்களை விடுதலை செய்தான்.

தெரிந்து கொள்வோம்!


 மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடும்.

200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்கள்.

உலக அளவில் தாம்பத்ய உறவிற்கு ஆணும் பெண்ணும் எடுத்துக் கொள்ளும் சராசரி நேரம் இரண்டு நிமிடங்கள்.

நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியது.

ராக்கூன் என்ற விலங்கு உணவை நீரில் கழுவிய பிறகே உண்ணும் வழக்கமுடையது.

மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது.

நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டும்.

நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.

ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம்.

வண்ணத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால்தான் சுவையை அறிகின்றன.

மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு.

கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.

ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும்.

பெண் சிலந்திப் பூச்சிகள் ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன.

பூனைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்குகின்றன.

நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.

ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800 குட்டிகள் வரை போட்டு விடும்.

ஒரு பட்டுப்புழுவின் கூட்டில் 32 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்கும்.

ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது.

புழுவை இரண்டாகத் துண்டித்துப் போட்டாலும் அது சாகாது.

காண்டாமிருகத்தின் காலில் மூன்று பாதங்கள் இருக்கின்றன.

பூச்சி இனங்களில் அறிவாற்றல் அதிகமுடையது எறும்பு.

உலகில் அதிகமாக முட்டையிடும் உயிரினம் கரையான்.

கடல் பிராணியான ஆக்டோபஸின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

கொசுவுக்கு 47 பற்கள் இருக்கின்றன.

தியானம் செய்வது எப்படி? தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?



தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். தியானம் இப்படி தான் செய்யவேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது பலபேர் பலமுறையில் சொல்வார்கள்.

 ஆனால் அமைதியான சூழலில் (அதிகாலை உகந்தது) இரு கால்களையும் மடக்கி உட்கார்ந்து இரு கண்களையும் மூடிய நிலையில் அமைதியாக நம்முடைய மனம் அலைபாய்வதை நிறுத்தி ஒருநிலைப்படுத்தி உட்கார்ந்து இருப்பதே தியானம் என அழைக்கப்படுகிறது.


இந்த தியானம் செய்வதனால் மனிதனுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. அதில் சில குறிப்பிட்ட நன்மைகளை கீழே கொடுத்துள்ளேன்.


• ஆக்சிஜன் உபயோகத்தை கட்டுக்குள் வைக்கிறது.

• இதய துடிப்பு வேகமாக இருந்தால் அதை கட்டு படுத்துகிறது.

• உயர் ரத்த அழுத்த பிரச்சினையை குறைக்கிறது.

• உங்கள் மனதை பரப்பரப்பில் இருந்து நிம்மதி அடைய செய்கிறது.

• நம்முடைய உடல் பகுதிகள் சீராக இயங்க உதவுகிறது.

• உடல் எடையை குறைக்கலாம்.

• உடலிற்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.

• உடல் சக்தி வீணாவதை தடுக்கும்.

• தன்னம்பிக்கையை ஏற்ப்படுத்தும்.

• மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்.

• ஞாபக சக்தி அதிகரிக்கும்.

• தேவையில்லாமல் கோபப்படுவதை குறைக்கும்.

• மாணவர்களின் படிக்கும் சக்தி அதிகரிக்கும்.

• பேராசையை தவிர்க்கும்.

• உடலின் சக்தி,வேகம் அதிகரிக்கும்.

• கண்பார்வை அதிகரிக்கும்.

• அமைதியான மன நிலையை கொடுக்கும்.

• மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும்.

• முடிவு எடுக்கும் திறனை அதிகபடுத்தும்.

• மற்றவர்களிடம் இருந்து உங்களின் நிலையை அதிகரிக்கும்.

• போதை பொருளுக்கு அடிமையாகி இருந்தால் மீண்டு வர துணை புரியும்.

• ஓயாமல் எதையாவது யோசித்து கொண்டிருப்பதை தடுத்து மனதை ஒருநிலை படுத்தும்.

• சுவாச பிரச்சினைகளை தீர்க்கும்.

• புகை பழக்கத்தில் இருந்து மீள முடியும்.

• எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க உதவும்.

• லட்சியங்களை எளிதில் அடைய உதவும்.

• ஒரு தகவலை உள்வாங்கும் திறனை அதிகரிக்கும்.

• எந்த விஷயத்தையும் பெரிது படுத்தாமல் மன்னிக்க மனதை தயார் செய்யும்.

• நீங்கள் கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தால் தங்களுக்கும் இறைவனுக்கும் இடையே இனம் புரியாத ஆழமான உணர்வை உருவாக்கும்.

• நண்பர்கள் வட்டம் பெருகும்.

• தக்க சமயத்தில் தகுந்த முடிவை எடுக்கும் திறனை அதிகர்க்கும்.

• சமூகத்தில் தங்களின் நிலை உயரும்.

• கிடைத்தை வைத்து சந்தோசப்படும் அறிவை கற்று கொடுக்கும்.

• மன அழுத்தம், மனநோய் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட உதவி புரியும்.

• சமூக அக்கறை அதிகரிக்கும்.

• எதுக்காவும் யாரிடமும் கோபப்படுவதை தவிர்க்கும்.

• தூக்கம் வராமல் கஷ்ட படுபவர்கள் படுத்த உடனே தூக்கம் நன்றாக வரும்.

• தூக்கத்தில் கண்ட கனவுகள் வருவதை தவிர்த்து நிம்மதியாக தூங்க முடியும்.

• மருத்துவமனைக்கு செல்லும் தேவையை குறைக்கும்.

• மருந்து மாத்திரைகளிடம் இருந்து உங்களை விடுவிக்கும்.

• மாணவர்கள் பாடங்கள் கவனிக்கும் திறனை அதிகர்க்கும்.

• தற்காப்பை உருவாக்கும்.

• வாழ்க்கையின் மேடு,பள்ளங்களை பக்குவமாக கையாள மனதை தயார்படுத்தும்.

• வயதிற்கேற்ற மன முதிர்வை உருவாக்கும்.

• இசையில் நாட்டமுள்ளவர்களுக்கு கலைத்திறனை அதிகரிக்கும்.

• ரத்த சுத்திகரிப்பை அதிகரிக்கும்.

• நீங்கள் மறந்துவிட்ட சில முக்கிய நிகழ்வுகளை ஞாபகபடுத்தும்.

• உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை நீக்கும்.

• உடலில் உள்ள கொழுப்பு சக்தியை குறைக்க உதவும்.

• இதய நோய்களை கட்டுபடுத்தும்.

• உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாட்டை சீர்படுத்தும்.

• வியர்வை அதிகம் வெளியேறுவதை சீர்படுத்தும்.

• தலைவலி பிரச்சினை உள்ளவர்கள் அதற்க்கு தீர்வு காணலாம்.

• ஆஸ்மா நோயிலிருந்து பூரண குணமடையலாம்.

• தீய பழக்கங்களை ஒழிக்கும்.

• நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

• கற்பனை திறன் அதிகரிக்கும்.

• மற்றவர்கள் கூறும் அறிவுரையை தட்டி கழிக்காமல் பொறுமையோடு கேட்டு அதன்படி நடக்கும் மனநிலையை உருவாக்கும்.

• உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும்.

• உங்களின் அறிவுத்திறன் வளரும் விகிதம் அதிகமாகும்.

• பெரியவர்களை மதித்து நடக்கும் உயரிய மனம் உருவாகும்.

• உங்களுக்கு இருக்கும் கடமைகளை உணர செய்யும்.

• கடமைகளில் வெற்றியும் பெறச்செய்யும்.

உங்கள் பெண் பிள்ளைகளை சுய மதிப்புடன் வளர்ப்பதற்கான சில வழிமுறைகள்…




உங்களுடைய மகள் உங்களுக்கு மிகவும் அரிய சொத்தாக இருப்பவள். அவள் இனிமையானவள், அழகானவள் மற்றும் வளமாக வாழ்வதற்கு மிகவும் தகுதியானவள். இவையனைத்தும் உண்மை என்னும் போது, அவளுடைய பெற்றோர்ககளாகிய உங்களுக்கு அவளை சுய மதிப்புடையவளாக வளர்க்கும் பொறுப்பு பெரிதும் உள்ளது.

இது மிகவும் எளிமையானது மற்றும் தினசரி அவளை சில செயல்களைச் செய்யச் சொல்லி கற்றுக் கொடுக்கக் கூடியது. ஒரு பெற்றோராக நீங்கள் குழந்தையின் மனதில் உலகத்தை எதிர்கொள்ளத் தேவையான நம்பிக்கையையும் மற்றும் அவளுடைய வாழ்க்கைக்கு சிறந்த அர்த்தத்தையும் உருவாக்க கொடுக்க வேண்டும். மகளை வளர்தெடுப்பது பொதுவாகவே கடினமான விஷயமாக இருந்தாலும், அது ஒரு உன்னதமான வேலையாகும். பெண் குழந்தையை வளர்த்தெடுப்பதிலும், அவளுடன் பழகுவதிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

வாழ்க்கை தங்களிடம் முன்வைக்கும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தேவையான நம்பிக்கையை அளித்து, பின்நாளில் சமூகத்தின் சிறந்த மனிதர்களாக தங்களை வெளிப்படுத்தவே குழந்தைகளின் சுய மதிப்பு உதவுகிறது. தங்களை சூழ்ந்துள்ளவர்கள் தங்களை மதிப்பவர்களாகவும், தங்களுடைய மதிப்பை உணர்ந்தவர்களகாவும் இருக்கும் இடங்களில் பெண்களை இருக்கச் செய்ய வேண்டும். குறைவான சுய மதிப்புடைய பெண்கள் தங்கள் வாழ்க்கையில் தவறான பாதையை தேர்ந்தெடுப்பார்கள் என்பது பொதுவான உண்மையாகும். குழந்தைகளை நல்ல வழியில் வளர்ப்பது பெற்றோர்களின் கையில் தான் உள்ளது. ஒரு தயானவள் தன்னுடைய குழந்தையின் வாழ்வில் பெரிய விஷயங்களை செய்யக் கூடியவள் மற்றும் பெண்களை அவள் வளர்ப்பது ஒன்றும் குறைவான கவனம் கொண்டு செய்யும் விஷயமும் அல்ல. உங்கள் மகளை சுய மதிப்புடன் வளர்ப்பதற்கான சில குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.

1. பாராட்டுங்கள்!


அவளுக்கு பாராட்டுகளை தெரிவியுங்கள்! அவள் அதற்கு தகுதியானவள் தான். அவள் சிறிய வேலையை செய்தால் கூட, நீங்கள் அவளை பாராட்டலாம். அவள் மிகச்சிறந்த பணியை செய்துள்ளதாக சொல்லுங்கள். அவளுக்கு மேலும் சில பணிகளை கொடுத்து, அவளால் அவற்றை செய்ய முடியும் என்று சொல்லுங்கள். அவளால் அவளுடைய வழிமுறையில் எந்த விஷயத்தையும் கையாள முடியும் என்று சொல்லுங்கள். பெண் குழந்தையை வளர்ப்பது சில நேரங்களில் அதிக தேவையுள்ளதாக இருக்கும், அதனால் உங்களுடைய அன்பை முழுமையாக அவளுக்கு கொடுங்கள்.

2. தேவை கல்வி


 நல்ல தரமான கல்வி இயற்கையாகவே சுய மதிப்பை அதிகரிக்கும் கருவியாகும். அவளுக்கு எல்லா வகையிலும் கல்வியை புகட்டுங்கள். அவளை செய்திகளை அறியச் செய்யுங்கள். உங்களுடைய பிஸியான வேலைகளிலிருந்து சிறிது நேரத்தை அவளுடன் கழிப்பதற்காக ஒதுக்குங்கள். அவள் என்ன கற்றுக் கொண்டாள் என்பதை கேளுங்கள், அவளுடன் சேர்ந்து டிவி பாருங்கள்! டிவியில் பார்த்த விஷயங்கள் பற்றியும், அவளைப் பற்றியும் மற்றும் உங்களைப் பற்றியுமான விஷயங்களை அவளுடைய பேசுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், மேலும் அவள் எவற்றை பார்க்கக் கூடாது என்பதையும் குறிப்பிடுங்கள். ஊடகங்களின் தகவல்களை சரியாக தேர்ந்தெடுக்கும் வகையில் அவளுக்கு உதவி செய்யுங்கள். இந்த வகையில் உங்கள் மகளின் சுய மதிப்பினை நீங்கள் உயர்த்தலாம்.

3. திறன்களை வளர்த்தல்

 குழந்தைகளை திறன் மிக்கவர்களாக வளர்ப்பதன் மூலம் அவர்களை சுய மதிப்பு மிக்கவர்களாக்க முடியும் என்பது முக்கியமான கருத்தாகும். பெண் குழந்தைகளை அவர்களுக்கான திறன்களை அவர்களாகவே வளர்க்கச் செய்வதும் கூட, பெண்களை வளர்ப்பதன் ஒரு பகுதியாக உள்ளது. அவள் தன்னுடைய கனவுகளை செயல்படுத்த ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுங்கள். பெண்களை வளர்ப்பது எளிதான விஷயம் கிடையாது, அதற்கு நிறை அன்பும், நேரமும் தேவைப்படும்.

4. வீட்டில் உள்ள இதழ்களை கவனிக்கவும்

 நீங்கள் எப்பொழுதும் செய்ய வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். உங்கள் வீட்டில் நீங்கள் வாங்கும் இதழ்களையும் மற்றும் உங்கள் மகள் அவற்றில் எதை படிக்கிறார் என்பதையும் சற்றே கவனிக்க வேண்டும். அவள் சரியான இதழ்களையும், நூல்களையும் படிக்க நீங்கள் வழிகாட்ட வேண்டும். இதுவும் பெண்களை வளர்க்கும் முறை தான்.

5. அன்பை வெளிப்படுத்துங்கள்

 உங்களுடைய அன்பை உங்கள் மகள் உணர வேண்டும். கடினமான நாட்களிலும் கூட அவளை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை அவளுக்கு உணர்த்த வேண்டும் மற்றும் அவள் துன்பத்தில் இருக்கும் நாட்களில் தனிமையில் அவளை விட்டு விடக் கூடாது. உங்களுடைய அன்பை அவளுக்கு காட்டுங்கள், அவளை உணரச் செய்யுங்கள். இதன் மூலம் குழந்தைகளின் சுய மதிப்பு உயரும். சில குழந்தைகளிடம் சுய மதிப்பு குறைவாகவே இருக்கும். எனினும், உலகம் முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தங்கள் குழந்தைகளை தயார் செய்ய வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். அவளை இவ்வகையில் சுய மதிப்புடன் தயார் செய்வதன் மூலமாக ஒரு நல்ல வாழ்க்கையை நீங்கள் அவளுக்கு அமைத்துக் கொடுக்கிறீர்கள்.

மகாகவி பாரதியார் - பிறந்தநாள் -11 டிசம்பர்!




 காக்கைச் சிறகினிலே நந்தலாலா
 நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா

 நல்லதோர் வீனை செய்து அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

 நெருங்கின பொருள் கைபட வேண்டும்
 மனதில் உறுதி வேண்டும்

 வட்ட கரிய விழியில் கண்ணம்மா
 வானக் கருனைக் கொள்

 இந்த அழகிய வரிகள் எல்லாவற்றுக்குமே ஓர் ஒற்றுமையுண்டு. அவை அனைத்துமே ஒரே பேனாவில் இருந்து உதிர்ந்த வரிகள். வைரகவி என்று அழைக்கப்பட்ட ஒரு கவிஞரால் வடிக்கப்பட்ட கவிதைகள், சினிமாப் பாடல்களாக வந்ததால் அவை பெரும் புகழ்ப் பெற்றன. ஆனால் சினிமா நமக்குக் காட்டாத இன்னும் பல அரிய கவிதைகளை தமிழ் உலகுக்கு தந்திருக்கிறார் அந்த அமரகவி அவர்தான் மீசைக் கவிஞன் என்றும் முண்டாசு கவிஞன் என்றும் தமிழ் இலக்கியம் உலகம் போற்றும் மகாகவி பாரதியார்.

அவருக்கு கவிதை என்ற வானம் வசப்பட்ட கதையைத் தெரிந்துகொள்வோம். 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11ந்தேதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் என்னும் ஊரி சின்னச்சாமி அய்யருக்கும் இலக்குமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பாரதியார். அவருக்கு பெற்றோர் இட்ட இயற்பெயர் சுப்ரமணியன். சுப்பையா என அவரை செல்லமாக அழைத்தனர்.

சுப்பையாவுக்கு 5 வயதானபோது அவரது தாயார் இறந்து போனார் 2 ஆண்டுகள் கழித்து தந்தையார் மறுமணம் செய்து கொண்டார் சிறு வயதிலிருந்தே சுப்பையாவுக்கு மொழி மீது சிறந்த பற்றும் புலமையும் இருந்தது. 7 வயதிலேயே அவர் கவிதைகள் எழுதத் தொடங்கினார் அவருக்கு 11 வயதானபோது அவரது கவி பாடும் ஆற்றலையும் புலமையையும் வியந்து பாராட்டி அவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார் எட்டயபுர மன்னர். அன்றிலிருந்து அவர் பெயர் சுப்ரமணிய பாரதி என்றானது. பாரதி தமிழும் கவிதையுமாக தமிழுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, அவரது தந்தையோ தனது மகன் தொழில்நுட்பத் துறையில் தேர்ச்சிப் பெற வேண்டும் என விரும்பி அவரை தமிழ்ப்பள்ளியில் சேர்க்காமல் ஆங்கிலமும் கணிதமும் பயில்வதற்காக திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தார்.

அங்கு சென்று கல்வி பயின்ற பாரதிக்கு படித்துக்கொண்டிருந்தபோதே செல்லம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார் தந்தை. ஆனால் பின்னாளில் இது போன்ற பால்ய விவாகத்தை வன்மையாக கண்டித்தார் பாரதி. "பாலருந்தும் மழலையர் தம்மையே கோலமாக மணத்திடைக் கூட்டும் இப்பாதகர்கள் இன்னும் ஆயிராமாண்டு அடிமைகளாக இருந்து அழிவர்" என்று சபித்தார்.

நல்ல நிலையில் இருந்த பாரதியின் தந்தை எட்டயபுரத்தில் பருத்தி அரவை ஆலை நிறுவ விரும்பினார். அந்த ஆலைக்காக வெளிநாட்டிலிருந்து கப்பல்களில் வந்துகொண்டிருந்த இயந்திரங்களும் உதிரிப் பாகங்களும் கடலில் மூழ்கவே அவருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. அந்தக் கவலையிலிருந்து மீள முடியாமல் நோய்வாய்ப் பட்டு அவர் இறந்து போனார். அப்போது பாரதிக்கு வயது 16 தான் தந்தையின் மறைவிற்குப் பிறகு பாரதியின் குடும்பத்தில் வறுமை வந்து சேர்ந்தது.

பிறகு காசிக்குச் சென்று அலகாபாத் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து சமஸ்கிருதத்தையும் இந்தியையும் கற்றார். சமஸ்கிருத மொழியில் முதல் வகுப்பில் தேறினார் ஆங்கிலக் கவிஞர்களான ஷெல்லி, பைரன் போன்றோரின் கவிதைகளில் அவருக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டது. அதன்காரணமாக அவர் பின்னாளில் ஷெல்லிதாசன் என்ற புனைப்பெயரி கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இந்தி சமஸ்கிருதம் தவிர்த்து ஆங்கிலம் பெங்காலி ஹச் போன்ற மொழிகளிலும் புலமைப் பெற்றிருந்தார் பாரதி. அத்தனை மொழிகளில் புலமைப் பெற்றிருந்ததால்தான் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று துணிந்து சொன்னார்” பாரதி.

தீண்டாமையை அறவே வெறுத்தவர் பாரதி. அதற்கு தன்னையே முன் உதாரணமாக்கிக்கொண்டார் தீண்டாமை எனும் கொடுமைக்கு ஆளானோரிடம் அன்பு செலுத்தியதோடு அவர்களுக்கு இல்லாதது தனக்கு வேண்டியதில்லை என்று கூறி தான் அணிந்திருந்த பூ நூலை அறுத்தெரிந்தார. நான்கு ஆண்டுகள் காசியில் இருந்துவிட்டு திரும்பிய பாரதி எட்டயபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவைக் கவிஞாராக பணியாற்றினார்.

1903 ஆம் ஆண்டு 21 ஆவது வயதில் அவரது எழுத்துக்கள் முதன்முதலில் அச்சில் வந்தன. அதற்கு அடுத்த ஆண்டு மதுரை சேதுபதிப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் சுதேசமித்திரன் பத்திரிக்கையின் துணை ஆசிரியராக பொறுப்பேற்றார். 1905 ஆம் ஆண்டு சுதந்திர வேட்கைக் காரணமாக அரசியலில் பிரவேசிக்கத் தொடங்கினார் பாரதி.

கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சியுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. சகோதரி நிவேதிதாவை சந்தித்தப் பாரதி அவரையே தந்து ஞான குருவாக ஏற்றுக் கொண்டார். 1907 ஆண்டில் இந்தியா என்ற வார ஏட்டையும் பாலபாரதம் என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். அப்போது பாரதியின் கவனம் இந்திய சுதந்திர போராட்டத்தின் பக்கம் திரும்பியது.

சுதந்திரத்தை வலியுறுத்தும் கட்டுரைகளையும் தலையங்கங்களையும் பிரசுரித்தார், வ.உ.சிக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை கடுமையாக கண்டித்து கட்டுரைகள் எழுதினார். பிரிட்டிஷ் ஆட்சியாளரின் கவனம் பாரதி பக்கம் திரும்பியது. பாரதியை கைது செய்ய முனைந்தனர். அதனையறிந்த பாரதி தன் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் ஃப்ரெஞ்சு நாட்டின் ஆதிக்கத்தின் கீழிருந்த பாண்டிச்சேரியில் சிலகாலம் தலைமறைவாக வாழ்ந்தார். அவ்வாறு வாழ்ந்தபோதுதான் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலிசபதம், போன்ற புகழ்பெற்ற அமரக் கவிதைக் கவிதைகளை எழுதினார்.

அதோடு 1912 ஆம் ஆண்டு பகவத் கீதையை தமிழில் மொழிப் பெயர்த்து வெளியிட்டார் பாரதி பாண்டிச்சேரியில் இருந்தவாறே அவர் இந்தியா பத்திரிக்கையின் மூலம் தொடர்ந்து சுதந்திர வேட்கையைத் தூண்டிவிடும் கட்டுரையை எழுதினார். பாரதியின் குரலுக்கு தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி இந்தியா பத்திரிக்கைக்கு தடை விதித்தது.

1918 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து வெளியேரிய பாரதி தமிழ்நாட்டு எல்லையில் பிரிட்டிஷ் போலீசாரால் கைது செய்யப் பட்டு 34 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார். விடுதலையானதும் கடையம் எனும் ஊரில் குடியேறினார் பாரதி. அங்கு வறுமையில் வாடிய அவர் தனது சிரமத்தை விவரித்து எட்டயபுர மன்னருக்கு கடிதம் எழுதினார் ஆனால் பாரதிக்கு எந்த உதவியும் கிடைக்க வில்லை. பாரதியின் மனைவி செல்லம்மாள் வீட்டின் வறுமை தெரியாமல் கணவரைப் பராமரித்தார். அத்தகைய மனைவி வாய்த்ததால்தான் குடும்ப கவலையே இல்லாமல் தமிழ்ப்பணியிலும் பொதுவாழ்விலும் ஈடுபட முடிந்தது.

பாரதியால் வறுமையில் கூட பாரதியிடம் தன்மானமும் செருக்கும் இருந்தது பொதுவாக கொடுக்குற கை மேலேயும் வாங்குகிற கை கீழேயும் இருக்கும் ஆனால் அந்த இலக்கணத்தையும் மாற்றினார் பாரதி ஒருமுறை அவரின் பணக்கார நண்பர் தட்டில் பணமும் பட்டாடையும் வைத்து பாரதியிடம் நீட்டினார் “தட்டை உமது கையிலேயே வைத்திரும்” என்று கம்பீரமாய் சொன்னபடி தமது கைகளால் அவற்றை எடுத்துக்கொண்டாராம் பாரதி.

கவிராஜன் என்பதால் அத்தனை மிடுக்கு என்று கூறுகிறது ஒரு குறிப்பு. மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் வயிறு நிறைய வேண்டும் என விரும்பியவர் பாரதி. அதனால் வீட்டில் செல்லம்மாள் வைத்திருந்த கொஞ்சம் அரிசியையும் காகங்களுக்கு வாரி இறைத்து விட்டு மதியம் உண்ண உணவு இல்லாமல் அவர் பசியோடு இருந்த நாட்களும் உண்டு.

“காக்கைக் குருவி எங்கள் ஜாதி” என்று பாடியவராயிற்றே அவர் ஒருசமயம் நண்பர் ஒருவர் தமக்கு அளித்த பட்டாடையை வழியில் மேலாடையின்றி அவதிப்பட்ட ஓர் ஏழைக்கு போர்த்தி மகிழ்ந்தார் பாரதி. இப்படி தாம் வறுமையில் வாடியபோது கூட மற்றவர்களுக்கு வாரி வழங்கினார் அந்த மகாகவி ஆனால் அவரது வாழ்க்கையில் வறுமையைத் தந்த இயற்கை அவரது ஆயுளிலும் தாராளம் காட்ட மறுத்துவிட்டது.

1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தான் வழக்கமாக செல்லும் திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார் பாரதி எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானை அவரை தூக்கி எறிந்தது அதனால் பலத்த காயமுற்று நோய்வாய்ப் பட்டார். சிறிது நாட்களில் வயிற்றுக் கடுப்பு நோயால் அவதியுற்று அதே ஆண்டு செப்டம்பர் 11 ந்தேதி தனது 39 ஆவது வயதில் காலமானார் பாரதி.

இளம் வயதிலேயே அவர் மாண்டது அவலம் என்றால் அதை விட இன்னும் ஒரு சோகமான நிகழ்வை கவிராஜன் கதை’ என்ற தனது நூலில் குறிப்பிடுகின்றார் கவிஞர் வைரமுத்து. பாரதியின் இறுதி ஊர்வலத்தில் மிகச் சிலரே கலந்துகொண்டனர், அதனைப் குறிப்பிடும்போது:

இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவாக இருந்ததாம் தோழர்களே, மகா கவிஞனுக்கு மரியாதை பார்த்தீரோ அவன உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட ஆட்கள் இல்லையே!

தமிழ் பாரதிக்கு கிடைத்த வரம் பாரதி தமிழுக்கு கிடைத்த வரம். பாரதி குழந்தைகளுக்காக பாடினார், பெண்களின் முன்னேற்றத்திற்காக் பாடினார், அறியாமை நீங்கவும் ஜாதி வெறியை சாடவும் நாடு விடுதலைப் பெறவும் பாடினார். அந்தத் தீர்க்கத்தரிசியின் பல கனவுகள் பலித்தன அவர் இன்னும் அதிகம் காலம் வாழ்ந்திருந்தால் தமிழ் இன்னும் வளம் பெற்றிருக்கும் தமிழனும் வளம் பெற்றிருப்பான்.

மனித நேயமும் பெண் முன்னேற்றமும் ஜாதி ஒழிப்பும் சமத்துவமும் வறுமை ஒழிப்பும்தான் பாரதியின் வாழ்க்கைக் கனவுகளாயின அந்தக் கனவுகள் மெய்ப்படும் என்ற தன்னம்பிக்கையை அவர் எப்போதுமே இழந்ததில்லை. நமக்கும்கூட அந்த விதி பொருந்தும் நாம் விரும்பும் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையோடு பயணித்தால் நாம் விரும்பும் வானம் நமக்கும் வசப்படும் என்பதுதான் பாரதியின் 39 ஆண்டுகால வாழ்க்கை நமக்கு சொல்லும் முக்கிய பாடம்..!