Pages

Subscribe:

Ads 468x60px

Friday, 20 September 2013

முந்திரிக் கொத்து - சமையல்!

Moong dal, sesame, coconut varuttu for three separate terms to change color.



என்னென்ன தேவை?

பாசிப் பருப்பு - 1 கிலோ,
தேங்காய் - 2 (துருவியது),
எள் - சிறிது,
பச்சரிசி - 1/2 கிலோ,
ஏலக்காய் தூள் - சிறிது,
கருப்பட்டி அல்லது வெல்லம் - 1/2 கிலோ,
மஞ்சள் தூள் - சிறிது,
எண்ணெய் - தேவைக்கேற்ப.
 


எப்படிச் செய்வது?

பாசிப் பருப்பு, எள், தேங்காய் துருவல் மூன்றையும் தனித் தனியாக நிறம் மாறும் பதத்துக்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.  கருப்பட்டி அல்லது  வெல்லத்தை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, கையில் ஒட்டும் பதத்துக்கு கெட்டியாகப் பாகு காய்ச்ச வேண்டும். வறுத்த பாசிப் பருப்பை மிதமாக  அரைத்து, அதில் ஏலக்காய் தூள், எள், தேங்காய் துருவலைக் கொட்டி, பாகை ஊற்றிக் கெட்டியாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்  கொள்ள வேண்டும். பச்சரிசியை 1 மணி நேரம் ஊற வைத்து, அரைத்து, லேசாக மஞ்சள் தூள் கலந்து உருட்டி வைத்துள்ள உருண்டைகளை இந்த  மாவில் நனைத்து எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும். 


மைதா-ரவை கொழுக்கட்டை - சமையல்!



 In the spirit of keeping a clean cloth maitamavai role in the tumor idli take away the speed, aravitavum.

 


என்னென்ன தேவை?

மைதா மாவு - 1 லு கப் (ஆவியில்  வேக வைத்தது),
ரவை - லு கப் (நெய்யில் வறுத்தது),
சர்க்கரை - 1 கப்,
பொடியாக நறுக்கிய முந்திரி,
திராட்சை - தலா 1 டேபிள் ஸ்பூன்,
துருவிய தேங்காய் 1/2 கப்,
ஏலக்காய் தூள்- சிறிது,
நெய் - தேவைக்கேற்ப.
 

எப்படிச் செய்வது?  

மைதாமாவை ஒரு சுத்தமான துணியில் கட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக விட்டு எடுத்து, ஆறவிடவும். பின் 2 லு கப் தண்ணீரை  கொதிக்க விட்டு அதில் ஒரு சிட்டிகை உப்பு, 2 டீஸ்பூன் நெய் விடவும். கொதிக்கும் தண்ணீரில் மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கிளறி  வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் நெய்விட்டு அதில் முந்திரி, திராட்சை சேர்த்து வறுக்கவும். இத்துடன் ரவையையும் தேங்காயையும் நன்கு சிவக்க  வறுத்து, சர்க்கரை சேர்த்து வதக்கி சுருள எடுத்து வைத்துக் கொள்ளவும். இது பூரணம். கையில் நெய் தொட்டுக் கொண்டு மேல் மாவில் இருந்து  (மைதா கலவையில்) ஒரு எலுமிச்சை அளவு எடுத்து விருப்பமான வடிவத்தில் கொழுக்கட்டை பிடித்து பூரணத்தை உள்ளே வைத்து மூடி ஆவியில்  வேக வைத்து எடுக்கவும்.


திருநெல்வேலி திரிபாகம்! - சமையல்!


 Groundnut oil fry the dough. After pouring the boiling milk than




என்னென்ன தேவை?

கடலை மாவு  - 1 கப்,
சர்க்கரை - 1 கப்,
பால் - 1 கப், நெய் - 1 கப்.
 


எப்படிச் செய்வது?  

கடலை மாவை நெய்யில் வறுக்கவும். பிறகு அதில் பாலை ஊற்றிக் கொதிக்க விடவும். மாவு வெந்தவுடன் சர்க்கரை போட்டுக் கிளறி, நெய்விட்டுக்  கிண்டினால் திரிபாகம் ரெடி.
 

பெண்களின் தலையாய பிரச்னையாக மாறி வரும் தைராய்டு!


கழுத்தில் வலி மற்றும் வீக்கம், நிணநீர் திரளையில் வீக்கம், குரல் கரகரப்பாவது, மூச்சு விடுதலில் சிரமம், விழுங்குவதில் சிரமம் ஆகியவையோ அல்லது நல்ல பசியிருந்தும் உடல் எடை குறைதல், இருதயத் துடிப்பு அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், நரம்புத்தளர்ச்சி, அதிக வியர்வை, மாதவிடாய் சட்டு சட்டென வருதல், குடல் இயக்கம் அதிகரித்தல், கை நடுக்கம். ஆகியவையோ இருந்தாலும் மேலும் உடல் எடைக்குறைப்பிற்கான அனைத்து வேலைகளைச் செய்தும் உடல் எடை குறையாமல் இருப்பது அல்லது உடல் எடை அதிகரிப்பது, சோம்பல், இருதய துடிப்பு இருக்கவேண்டிய அளவை விட குறைதல், கைகள் மறத்துப் போதல், வறண்ட சருமம், மாதவிடாயில் வெளியேற்றம் கடுமையாக இருத்தல். மலச்சிக்கல் ஆகியவையில் ஏதாவது இருக்கிறதா?



இதையெல்லாம் தாண்டி எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல.. என்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் கூட நீங்கள் உடனடியாக தைராய்டு டெஸ்ட் எடுத்துக் கொள்வது அவசியம் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.



Male thyroid anatomy

 



இது குறித்து நம்மிடம் விவரித்த டாக்டர்கள்,”இப்போதெல்லாம் இந்த தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறி வருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.தைராய்டு நமது கழுத்துப் பகுதியில் பட்டர்பிளை வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோன் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இப்பிரச்னை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். 



அதே போல் உணவிலும் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும். மாதவிலக்கு காலம் மற்றும் கர்ப்பகாலத்தில் தைராய்டு பிரச்னை உள்ள பெண்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். தைராய்டின் அளவு அதிகரித்தால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு மற்றும் பிரசவ காலப் பிரச்னைகளை உருவாக்கும். 



தைராய்டு குறைவாக இருக்கும் போது வறண்ட தோல், உடல் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், சாதாரண நாட்களிலும் குளிர்வ தைப் போல உணர்வது, முறையற்ற மாதவிலக்கு, குரல் மாறுதல் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும். தைராய்டு அளவு அதிகரிக்கும் போது தொண்டைப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு எச்சில் விழுங்குவதில் சிரமம் ஏற்படும். பிரச்னை சிறிதாக இருக்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியம். இதன் மூலம் தைராய்டு அளவு அதிகரிப்பதையோ, குறை வதையோ தடுக்கலாம். 



உடலில் அயோடின் உப்பின் அளவு குறைவதன் காரணமாக தைராய்டு பிரச்னை வருகிறது. அயோடின் உள்ள உப்பு எடுத்துக் கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்னையை சரி செய்ய முடியும். அடுத்தகட்டமாக மாத்திரைகள் கைகொடுக்கும். தொண்டையில் கட்டி பெரிதாகும் பட்சத்தில் ரேடியோ தெரபி அல்லது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்னைகளை தவிர்க்க முடியும். 



பாதுகாப்பு முறை: 

தைராய்டு பிரச்னை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு பிரச்னை இருந்தால் குழந்தைக்கும் தைராய்டு பிரச்னை உள்ளதா என்பதை சிறுவயதிலேயே சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, டென்ஷன், படபடப்பு போன்ற பிரச்னைகள் தோன்றும். காரணமின்றி இந்த அறிகுறிகள் தென்பட்டால் தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும். இது பற்றி பல பெண்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அறியாமையை தவிர்த்து, தைராய்டு அளவைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உடலில் உண்டாகும் மற்ற பிரச்னைகளை சரி செய்ய முடியும். 



உடற்பயிற்சி மூலமும் இந்த தொல்லையை எதிர்கொள்ளலாம். வாக்கிங் செல்வது அவசியம். சத்தான உணவுகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். அதே சமயத்தில் தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உணவில் கல் உப்பு பயன்ப டுத்துவதன் மூலம் அயோடின் குறைபாட்டைத் தடுக்கலாம். சுடு தண்ணீரில் கல் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் அயோடின் சேர வாய்ப்புள்ளது. இது போன்ற நடைமுறைகளால் தைராய்டு பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.” என்றனர்.

ஆச்சர்ய.. கன்னியாகுமரி..! - சுற்றுலாத்தலங்கள்!


ஆச்சர்ய.. கன்னியாகுமரி..!
 
ஆச்சர்ய.. கன்னியாகுமரி..!

கன்னியாகுமரி ஓர் இயற்க்கையின் ஆச்சர்ய பூமி... முக்கடலும் சங்கமிக்கும் இக்கடற்கரையில்  அன்னை கன்னியாகுமரித் தாயின் திருக்கோயில் அமைத்திருக்கிறது . கடல் நடுவே வீரத்துறவி விவேகானந்தரின் திருக்கோயிலும் ஐய்யன் திருவள்ளுவரின் பிரமாண்டத் திருச்சிலையும் தேசத் தந்தை மகாத்மா காந்திஜியின் நினைவு மண்டபமும் ஒருசேர ஒரே இடத்தில் அமைந்திருப்பது ஆச்சரியமல்லவா?

அந்த ஆச்சர்ய கன்னியாகுமரியை இப்போது அறிவோம்
 

கன்னியாகுமரியில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு சொர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கேரள மாநிலமும் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளாக தமிழகத்தின் நெல்லை மாவட்டமும் திகழ்கின்றன.  இங்கு காணக் கிடைக்கும் சூரிய உதயமும், அஸ்தமனமும் வண்ணத்திருவிழாவாக திகழ்கின்றது கிழக்கே வங்கக்கடலும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் மேற்கே அரபிக்கடலும் கூடி அலைமோதும் அழகிய காட்சியுடையது. சில பவுர்ணமி நாளன்று, இக்கடற்கரையில் நின்று மாலைக் கதிரவன் மேலைக் கடலில் மறைவதையும் முழுமதி கீழைக் கடலில் கிளர்ந்தெழுவதையும் ஒரு சேரக் கண்டு களிக்கலாம். பல வண்ண மணல் நிரம்பிய குமரி கடற்கரையைக் காணக்காண மனதெல்லாம் உற்சாகம் பரவும்
1984ல் தேசப்பிதா காந்தியடிகளின் அஸ்தி இங்கு கடலில் கரைக்கப்பட்டது. கரைக்கும் முன்பு அஸ்தி வைக்கப்பட்ட கலசம் ஒரு பீடத்தின் மீது வைத்து அஞ்சலி செய்யப்பட்டது. அவ்விடத்தில் ஒரு நினைவுச்சின்னம் கட்ட காந்தியடிகளின் சீடர் கிருபளானி மேற்கொண்ட முயற்சியால் 1954ல் அடிக்கல் நாட்டி 1956 ல் அழகிய மண்டபமாக கட்டி முடிக்கப்பட்டது. காந்திஜி பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி சூரிய ஒளி பீடத்தின் மீது படும்படியாக அமைத்திருப்பது தனிசிறப்பு. சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்திழுக்கும் மண்டபமாக திகழ்கிறது. அதுமட்டுமல்ல அம்மனின் சக்தி பீடங்களில் கன்னியாகுமரியும் ஒன்றாக திகழ்கிறது
 

கன்னியாகுமரி அம்மன் ஆலயம்
 
கன்னியாகுமரியில் கடற்கரையோரமாக அமைந்துள்ளது குமரி பகவதி அம்மன் ஆலயம். அன்னை பகவதி திருமணம் செய்து கொள்ளாமல் குமரியாகவே வாழ்வதால் அன்னைக்கு கன்னியாகுமரி என்று பெயர். அதனால் தான் இந்த மாவட்டத்திற்கு கன்னியாகுமரி என்று பெயர் வந்தது. முக்கடலும் சங்கமிக்கும் கடலோரமாக அமைந்துள்ளது இந்தக் கோவில். குமரி அம்மனின் மூக்குத்தி ஒளியால் கவரப்பட்டு வந்த கப்பல் ஒன்று பாறையில் மோதி சிதறி விட்டதாம். அதனால் கடலை நோக்கிய கோவிலின் கருவறை வாசல் மூடப்பட்டிருக்கிறது என்பது ஐதீகம்.
 

திருவள்ளுவர் சிலை

கடலில் காணப்படும் இன்னொரு பாறையில் அதி அற்புதமாக, பிரமாண்டமாக நிற்கும் திருவள்ளுவர் சிலை இருக்கிறது. மிகவும் கலைநுணுக்கத்துடன் திருக்குறளில் 133 அதிகாரங்களையும் நினைவுபடுத்தும் வகையில் 133 அடி உயரத்தில் பிரமாண்டமாய் வானுயர நின்ற வடிவில் எழிலோடு நம் அய்யனின் திருச்சிலை  அமைந்திருக்கிறது   இச்சிலையை அருகில் சென்று பார்க்க படகு போக்குவரத்து வசதி உள்ளது கடல் அலைகளோடு போட்டிபோட்டு கம்பீரமாக காட்சி தரும் இந்த திருவள்ளுவர் சிலை திறந்த வெளியில் நிற்பதால் கடல் காற்றாலும், மழை மற்றும் வெயிலாலும் சேதம் அடைகிறது. இதை தடுக்க 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலையை சுற்றிலும் ரசாயன கலவை பூசப்படுகிறது. சிலையில் படிந்துள்ள உப்பு படிவங்கள் உறிஞ்ச பேப்பர் ஒட்டப்பட்டு சுத்தப்படுத்தப்படுகிறது. பின்னர் வேக்கர் சிலிகான் மெட்டீரியல் மூலம் சிலை முழுவதும் ரசாயன கலவை பூசப்படுகிறது.
 

காந்தி நினைவு மண்டபம்
 
கன்னியாகுமரியில் தான் மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி கரைக்கப்பட்டது. அவருடைய நினைவாக முக்கடலின் கரையில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காந்தியின் சாம்பல் வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் இரண்டாம் தேதி காந்தியடிகளின் பிறந்த நாளன்று சூரிய ஒளி நேரடியாக இந்த சாம்பலின் மேல் விழுவது இதன் சிறப்பாகும்
 

விவேகானந்தர் நினைவு மண்டபம்
 
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ளது சுவாமி விவேகானந்தர் மண்டபம். 1892ல் சுவாமி விவேகானந்தர் சிகாகோ உரையை முடித்துக்கொண்டு  குமரிமுனை வந்து அம்மனை வழிபட்டுவிட்டு இப்பாறையில் உட்கார்ந்து தவம் செய்தாராம். அவரது நினைவாக அவர் தவம் செய்த பாறையின் மேல் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் இருந்து 200 மீட்டர் கடலின் உள்ளே இது அமைந்துள்ளது. மண்டபத்தின் உள்ளே தியான அறையும் அமைந்துள்ளது. வாரத்தின் எல்லா நாட்களும் காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணி வரை பாறைக்கு படகுப் போக்குவரத்து இருக்கிறது. குமரி முனையின் கிழக்கே கடலில் இரண்டு அழகிய பாறைகள் உள்ளன. அதில் பெரிய பாறை சுமார் 3 ஏக்கர் பரப்பும் கடல் மட்டத்திலிருந்து 55 அடி உயரமும் உடையது. அதில் ஓரிடத்தில் பாதம் போன்ற அடையாளம் காணப்படுகிறது. அதை தேவியின் திருப்பாதம் என்று அழைக்கிறார்கள்.
நாங்களும் ஒருமுறை கன்னியாகுமரி சென்று அந்த ஆச்சர்யத்தை உணருங்கள் 
 
 

கன்னியாகுமரிக்கு அருகே
அமைந்துள்ள சுற்றுலா தளங்கள்

நாகர்கோவில்
சுசீந்திரம்
வட்டக் கோட்டை
பத்மநாபபுரம் அரண்மனை
சிதறால் சமண நினைவு சின்னங்கள்
மாத்தூர் தொட்டிப் பாலம்
திருநந்திக்கரை குகைக் கோவில்
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்
உதயகிரிக் கோட்டை
உலக்கை அருவி
பேச்சிப்பாறை அணைக்கட்டு
பெருஞ்சாணி அணைக்கட்டு
திற்பரப்பு நீர்வீழ்ச்சி
முட்டம் கடற்கரை
தேங்காய்ப்பட்டணம் கடற்கரை
சங்குத்துறை கடற்கரை
ஆலஞ்சி கடற்கரை

சர்வதேச அமைதி தினம் – செப்டம்பர் 21!



உலக அமைதி நாள் (International Day of Peace International) ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினம் 1981 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் மூன்றாம் செவ்வாய்க் கிழமை கொண்டாடப்பட்டு வந்தது. 2002 ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தினம் செப்டம்பர் 21 ஆம் தேதியில் கொண்டாடப்படுகிறது. 



அமைதி என்பதற்குப் பல அர்த்தங்கள் இருக்கின்றன. தற்காலத்தில் அமைதி என்பது, பகை இல்லாத நிலையைக் குறிக்கிறது. சர்வதேச அளவில் போர் இல்லாத நிலையையும் குறிக்கிறது. மகாத்மா காந்திஜியின் கருத்துப்படி, அமைதி என்பது வன்முறை இல்லாமையை குறிக்கும். அமைதி – இது எங்குள்ளதோ அந்த இடம் எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும். அனைத்து பிரச்னைகளுக்கும், அமைதியே மருந்து

sep 21 - peace day

 



மேலும் உலகின் சகல முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது சமாதானம். வரலாற்றில் பல யுத்தங்கள் நடை பெற்றுள்ளன. 20 ஆம் நூற்றாண்டின் இரு பெரும் உலக மகா யுத்தங்கள் கோடிக்கணக்கான உயிர்களையும் சொத்துக்களையும் காலி செய்திருக்கின்றன. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் உலக சமாதானத்திற்காக 1945 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, உலக நாடுகளிடையே பூசல்களையும், போர்களையும் தடுக்க பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நம்மால் துப்பாக்கிகளுக்கும் குண்டுகளுக்கும் ஓய்வு கொடுக்க முடியவில்லை. 



அதே சமயம் உலகின் நிரந்தர சமாதானத்தை உருவாக்கும் பணி யுனெஸ்கோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. உலக சமாதான முயற்சி ஒன்றின் போது ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஹாமர்சீல்ட் விமான விபத்தில் உயிர் துறந்தது கொடுமையிலும் கொடுமையாகும். அவர் 1961 ஆம் ஆண்டு செப்டம்பர் மூன்றாம் வாரத்தின் செவ்வாய்க் கிழமையில் மரணம் அடைந்தார். அந்தத் தினமே உலக அமைதி தினமாக அனுசரிக்கப்படுகிறது. 



இந்த யுனெஸ்கோவின் பணி, கல்வி, அறிவியல், பண்பாட்டு நடவடிக்கைகளின் வழியாக உலக சமாதானம், மனித இனத்தின் பொது நலன் ஆகிய குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டும். ஐ.நா சபையும், ஐ.நா சாசனமும் இந்தக் குறிக்கோள்களின் அடிப்படையிலே அமைக்கப்பட்டிருக்கிறது. மனித உரிமைகளையும், கடமைகளையும் செயல்படுத்த முக்கியமாக தேவைப்படுவது சமாதானமாக இருக்கிறது. அதாவது, குடிமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் சுதந்திரமான, நியாயமான சட்டம், சமத்துவம், ஒருமைப்பாடு என்பது தான் சமாதானமாக இருக்கிறது. சமாதானம், வளர்ச்சி, ஜனநாயகம் ஆகிய மூன்றும் ஒன்றுக்கு ஒன்று உருதுணைபுரிபவையாக இருக்கின்றன. அவை ஒன்றையொன்று வலுப்படுத்துகின்றன. 



உலகில் அணு ஆயுதங்களுக்கு ஐக்கிய அமெரிக்க நாடுகள், ரஷ்யா (முன்னாள் சோவியத் ஒன்றியம்), சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா போன்ற நாடுகள் உரிமை கொண்டாடிக் கொண்டுள்ளன. உலக அமைதியை வலியுறுத்தும் நாடுகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையையே தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் நாடுகள் கூட பாதுகாப்பு என்கிற போர்வையில் அணு ஆயுத பலத்தை பெருக்குகின்றன என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். 

அரிய வகை மேஜிக் ட்ரிக்ஸ் ( Magic Tricks ) வீடியோவுடன் சொல்லி கொடுக்கும் தளம்!


சில நிகழ்ச்சிகள் நடக்கும் போது இடையிடையே நடக்கும் மேஜிக்
ட்ரிக்ஸ் நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும், இது போல் செய்வது
எப்படி என்ற கேள்வி நம்மில் பல பேருக்கும் இருக்கும் எப்படி
இது போல் மேஜிக் ட்ரிக்ஸ்  செய்கின்றனர் என்பதை வீடியோவுடன்
சொல்லிக்கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.




பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருந்தாலும் மேஜிக் செய்வதில்
பயிற்சி தான் முக்கியம் சிறிய ட்ரிக்ஸ் தான் என்றாலும் அதைப்
பயன்படுத்துவதில் உள்ள நெளிவு சுழிவு முக்கியம் அந்த வகையில்
ஒளிவு மறைவு இல்லாமல் மேஜிக் ட்ரிக்ஸ் எப்படி செய்கின்றனர்
என்பதை வீடியோவுடன் சொல்லிக்கொடுக்க ஒரு தளம் உள்ளது.



இணையதள முகவரி : http://easybartricks.com


இந்தத்தளத்திற்கு சென்று பலவகையான மேஜிக் ட்ரிக்ஸ் எப்படி
செய்கின்றனர் என்பதை வீடியோவுடன் சொல்லிக்கொடுக்கின்றனர்
இதில் எந்த வகையான ட்ரிக்ஸ் நமக்கு தெரிய வேண்டுமோ
அதற்கான வீடியோவை சொடுக்கி நாம் தெரிந்து கொள்ளலாம்.
Magic Tricks, Bottle Tricks , Coin Tricks ,Bill Tricks,Lighter Tricks
Cigarette Tricks, Easy Magic Tricks, All Bar Tricks போன்ற அனைத்தும்
தனித்தனி வகையாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. மேஜிக் ட்ரிக்ஸ்
பற்றி அறிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு
பயனுள்ளதாக இருக்கும்.


உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.





நிறம் என்பது ஒருவித மாஜை. நீங்கள் எந்த உடை அணிகிறீர்கள், அதன் விலை என்ன என்பதல்ல முக்கியம். அது பிறரைக் கவர்வதுமில்லை. அணிகிற உடையின் நிறம் தான் மற்றவர்களை ஈர்க்கிறது. ஆயிரக்கணக்கில் கொட்டிக் கொடுத்து வாங்கிய உடையானாலும், அது உங்களுக்கேற்ற நிறமாக இல்லாவிட்டால், யாருமே உங்களைத் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். யார் யாருக்கு என்ன நிறம் பொருந்தும், எந்த மாதிரி சந்தர்ப்பங்களுக்கு என்ன நிறம் உடுத்தலாம்? இதோ சில குறிப்புகள்!
நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நிற ஈர்ப்பு உண்டு என்பது தெரியுமா? உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
உதாரணத்துக்கு உங்கள் பிறந்த நாள் 04.03.1981 என வைத்துக் கொள்ளுங்கள்.
04.03.1981= 0+4+0+3+1+9+8+1
=26 (2+6)
=8
8 என்பது வெள்ளி நிறத்துக்கான எண். இப்படி 1 முதல் 9 வரையிலான எண்களுக்கு ஒவ்வொரு நிறம் உண்டு. (1- சிகப்பு, 2- ஆரஞ்சு, 3-மஞ்சள், 4- பச்சை, 5- நீலம், 6- இண்டிகோ, 7- ஊதா, 8- வெள்ளி நிறம், 9- பிங்க்)
உங்கள் பிறந்த நாளைக்கான நிறம் உங்களுக்கு அதிர்ஷமானது மட்டுமில்லை, உங்கள் நடத்தையையும் சொல்லிவிடுமாம்.
அதன் படி....
1. சிகப்பு- தன்னிச்சையானவர்கள், ஆதிக்க குணம் உடையவர்கள். சவால் விரும்பிகள், எதிலும் சுயமான முடிவையே எடுப்பவர்கள்.
2. ஆரஞ்சு- சுறுசுறுப்புத் திலகங்கள். வெற்றி இவர்களை விடாது விரட்டும். புதிய சிந்தனை உடையவர்கள்.
3. மஞ்சள்- தோழமையானவர்கள். சந்தோஷமானவர்கள். பாசிட்டிவ் குணமுடையவர்கள்.
4. பச்சை - பழமைவாதிகள், புத்திசாலிகள், நேர்மையானவர்கள்.
5. நீலம்- எடுக்கிற முடிவில் உறுதியான வர்கள். மிஸ் ஒழுக்கம் எனப் பெயரெடுக்க விரும்புவார்கள். பொறுமையும், அமைதியும் வாய்க்கப் பெற்றவர்கள்.
6. இண்டிகோ- திருப்தியானவர்கள். பக்குவமானவர்கள், கடின உழைப்பாளிகள்.
7. ஊதா- பிறரைக் கவர்பவர்கள், தாராள குணமுள்ளவர்கள், கிரகிப்புத் திறன் அதிகம் இருக்கும்.
8. வெள்ளி நிறம்- மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும், ரொம்பவும் சாதாரணமாகவே இருப்பார்கள். பழக இனிமையானவர்கள்.
9. பிங்க்- மென்மையானவர்கள், அப்பாவி, இளகிய மனம் படைத்தவர்கள்.

தென்னையும் நாணலும் - நீதிக்கதை!


 
 
ஒரு ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒரு தென்னை மரமும்.நாணலும் இருந்தன.
தென்னை மரத்துக்கு தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் இருந்தது.ஆகவே அவ்வப்போது நாணலை அது கேலி செய்து வந்தது.
 

'நீ மிகவும் சிறியவன்..மழை,காற்று,வெயில் இவற்றை உன்னால் தாங்க முடியாது.நானோ உயர்ந்தவன் ...நான் எல்லாவற்றையும் தாங்குவேன்...
 
 
எனக்கு  கவலை இல்லை' என்றது தென்னை நாணலைப் பார்த்து.....
 

சில நாட்கள் கழிந்தன....
 

மழைகாலம் வர... ஒரு நாள் புயல் ஏற்பட்டது...
 

புயல் காற்றில் நாணல் தலை வணங்கியது..
 
 
தென்னையோ புயலை எதிர்த்தது..
 

தென்னை வேரோடு சாய்ந்தது....

நாணல் எந்த சேதமும் அடையவில்லை....
 

நாமும் தென்னையைப்போல கர்வமாய் இல்லாமல் நாணலைப்போல அனைவரிடமும் பணிவாக இருக்கவேண்டும்.
 
 

காது வலி தீர்க்க வீட்டில் இருக்கு மருந்து!



 Ear pain is a common thing for everyone to adult children.
காது வலி பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் வரும் பொதுவான ஒன்று. இந்த காது வலி பெரும்பாலும் சளி  பிடிப்பதால் வரும்.  மேலும் அதிக இரைச்சல் மற்றும் சிலருக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சி காரணமாகவும் வரலாம். அப்படி  காதுவலி வந்தால் உடனே காதுக்குள்  எதையாவது போட்டு நுழைக்க கூடாது. 


இதனால் காதுக்குள் கிருமித்தொற்று தான் ஏற்படுமே தவிர சரியாகாது. மேலும் இந்த காதுவலி இரவிலேயே வருவதால் என்ன  செய்வதென்று  தெரியாமல் விழிக்கும் நேரத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய வீட்டு மருத்துவம் நமக்கு கைக்கொடுக்கும். காது  வலி வந்தால் தேங்காய்  எண்ணெயை சூடேற்றி அதில் சிறிது உப்பு போட்டு மிதமான சூட்டில் காதில் விட்டால் காதில் இருக்கும்  புண் ஆறி வலி குறையும். 



தூதுவளையை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரைக்குடித்தால் காது வலி குறையும். தாழம்பூவை நெருப்புத் தணலில் காட்டி கசக்கி  சாறு பிழிந்து  அதில் சில துளிகளை காதில் விட்டால் காது வலி காதில் தோன்றும் கட்டி ஆகியவை குணமாகும். கொஞ்சம் நல் லெண்ணெயில் ஒரு கிராம்பை  போட்டு சூடு செய்து பின் அந்த எணணெயை வலி உள்ள காதில் விட்டால் விரைவில் வலி கு றையும். 



சுக்கு, மிளகு, பெருங்காயம் ஆகியவைகளை அரைத்து சிறிதளவு நல்லெண்ணெயுடன் காய்ச்சி அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து  குளித்து  வந்தால் காது இரைச்சலும் அகலும். கரிசலாங்கண்ணி சாறு, நெல்லிக்காய் சாறு இரண்டையும் பால் மற்றும் அதிமது ரப்பொடி சேர்த்து தைலம் செய்து  தலைக்கு தேய்த்து குளித்து வர காது நோய் குணமாகும். 

பல் வலிக்கு என்ன செய்தால் நிவாரணம் கிடைக்கும்!



 If you have toothache, it is better to seek immediate advice from a dentist before the problem becomes worse.

உங்களுக்கு பல் வலி இருந்தால் அது அதிக விளைவுகளை தருவதற்கு முன்பு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது சிறந்தது.. சிலருக்கு இரவு நேரங்களில் தான் பல் வலி பாடாய்படுத்தும். அந்த சமயத்தில் வீட்டில் இருக்கும் சில இயற்கை நிவாரணிகளைக் கொண்டு பல் வலியை போக்க முயற்சி செய்யலாம். இந்த பொருட்கள் பல் வலியை போக்கி பற்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. பல் வலியை போக்க சிறந்த ஆறு நிவாரணிகளை பார்க்கலாம்.


கிராம்பு

பல்வலியை போக்குவதில் சிறந்து விளங்கும் கிராம்பு அனைவரின் வீட்டிலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று. கிராம்பு பல் வலியை போக்க கூடிய எதிர்ப்பு அழற்சி, எதிப்பு பாக்டீரியா, ஆக்ஸிஜனேற்ற மற்றும் உணர்ச்சி நீக்கும் பொருட்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. ஆகவே இது பல் வலிக்கு நிவாரணம் அளிக்கும் முக்கிய பண்புகளை பெற்றுள்ளதால் கிராம்பை பல்வலிக்கு பயன்படுத்தலாம்.

எப்படி பயன்படுத்தலாம்: கிராம்பு எண்ணெய்யை ஒரு காட்டன் துணி கொண்டு நனைத்து பல் வலி ஏற்படும் இடத்தில் சிறிது நேரத்திற்கு வைக்க வேண்டும். இப்படி செய்தால் பல் வலி குணம் பெறும். பல் வலியால் அவதி படுபவர்கள் அரை தம்ளர் தண்ணீரில் சிறிதளவு கிராம்பு எண்ணெய்யை ஒரு சில துளிகள் கலந்து வாயில் ஊற்றி கொப்பளிக்கலாம். மேலும் முழு கிராம்பை அரைத்து சிறிது கிராம்பு எண்ணெய் சேர்த்து பாதிக்கப்பட்ட பல்லின் மேல் தடவி வைத்தால் பல் வலி தீரும்.

பூண்டு

பூண்டை பயன்படுத்தினாலும் பல் வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.பூண்டு ஆண்டிபயாடிக் பண்புகள் மற்றும் பிறமருத்துவ குணங்களைகொண்டுள்ளது. இது பாக்டீரியா பாதிப்பில் உள்ள பகுதிகளை பாதிப்பிலிருந்து குறைக்கும் ஆற்றல் கொண்டது..

எப்படி பயன்படுத்தலாம்: வெறுமனே பூண்டையும், கிராம்பையும் சேர்த்து நசுக்கி சில துளிகள் உப்பு சேர்த்து பல் வலி உள்ள இடத்தில் தடவினால் பல் வலி குணம் பெறும். மேலும் பூண்டையும் கிராம்பையும் வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.. இப்படி செய்வது பற்களுக்கு தரும் இயற்கை சிகிச்சையாகும்.

கோதுமை புல் செடி(wheatgrass)

பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டு செயல்படுவது கோதுமை புல். இது பல்வலிக்கு தீர்வு தர தேவையான பாக்டீரியா எதிர்ப்பு சக்திகளை கொண்டு செயல்படுகிற-து. கோதுமைபுல் பல் வலியை சரிபடுத்தி பற்களில் சிதைவு ஏற்படுவதை தடுப்பதற்கும் தீர்வு வழங்குகிறது.

எப்படி பயன்படுத்தலாம்: கோதுமைபுல்லில் இருந்து சாறு எடுத்து அவற்றை வாய் கழுவ பயன்படுத்தலாம். இது ஈறுகளில் உள்ள நச்சுகளை பிரித்தெடுத்து பாக்டீரியா வளர்ச்சியை குறைத்து நோய் தொற்றை கட்டுபாட்டின் கீழ் வைத்துக்கொள்கிறது. மேலும் கோதுமைபுல் செடியை வாயிலிட்டு மென்று பல் வலியை போக்கலாம்.

வெங்காயம்

வெங்காயம் பல் வலியை குணப்படுத்தக்கூடிய கிருமி நாசினிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளது. பல் வலி வரப்போகிறது என அறிந்ததும் ஒரு முழு வெங்காயத்தை எடுத்து வாயிலிட்டு சுவைக்க தொடங்குங்கள். உங்களால் மெல்ல முடியவில்லையெனில் வெங்காயத்தை பசை போல அரைத்து பற்களின் மேல் தடவி வைக்க வேண்டும். இப்படி செய்தால் பற்களில் உள்ள கிருமிகளை கொன்று சில நிமிடங்களில் பற்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.

கொய்யா இலைகள்

கொய்யா இலைகளும் பல் வலியை தீர்க்கும். பாதிக்கப்பட்ட பல் வேலை செய்ய தொடங்குவதற்கு முன்பு வலி வரப்போவது என அறிந்ததும் ப்ரெஷ்சான ஒன்று இரண்டு கொய்யா இலைகளை வாயில் விட்டு மென்று விடலாம். மேலும் ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றி கொய்யா இலைகளை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பானதும் சில துளி உப்பு சேர்த்து வாய்களை சுத்தம் செய்யலாம். கொய்யா இலைகள் இல்லையெனில் பச்சை கீரைகளை பயன்படுத்தலாம். இவை இரண்டுமே பல் வலியை குணப்படுத்தும் சிறந்த மருந்து.

மிளகு மற்றும் உப்பு

மிளகு கலந்த உப்பு கூட வீட்டில் பல் வலியை கையாள சிறந்த மருந்தாகும். இது பல் வலிக்கு பயன் பெறக்கூடிய மிகச்சிறந்த மருந்தாகும். சம அளவு மிளகு, உப்பு எடுத்து சிறிது தண்ணீர் கலந்து பசை போல அரைத்து பாதிக்கப்பட்ட பற்களின் மேல் சில நிமிடங்கள் வைக்கலாம். இந்தமுறையை தினமும் சில நாட்களுக்கு செய்து வந்தால் பல் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.மேலும் பல் வலியை போக்க பெருங்காயம், ஐஸ் கியூப், பே பெர்ரி, சூடான உப்பு நீர் ஆகியவற்றைக் கொண்டும் பல்வலியை போக்கிகொள்ளலாம். 


வீரமிகு செஞ்சிக்கோட்டை - சுற்றுலாத்தலங்கள்!


   வீரமிகு செஞ்சிக்கோட்டை
 

 
வீரமிகு செஞ்சிக்கோட்டை.
 
தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி. விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த ஊர் , சென்னையில் இருந்து 160 கிமீ  தொலைவில் அமைந்துள்ள யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது.
மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது.

பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்கள் பாதுஷாபாத் என்றார்கள்  ,சோழர்கள் சிங்கபுர நாடு என்று கொண்டாடினார்கள் 
இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை.
பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.
 
செஞ்சிக் கோட்டையை, 13ம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்ட துவங்கினர். அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை பலம் பொருந்திய கோட்டையாக மாற்றினர். குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர்.
 
செஞ்சியின் வரலாறு பற்றி அதில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் அடிப்படையில் ஆராய்ந்தால்.. கி.மு. முதல் கி.பி 6 முதல்இங்கு ஜைனர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு, பல்லவர் காலத்தில் கிபி 600முதல் 900 முதல் சிங்கபுரத்தில் ஒரு குகைகோவில் கட்டப்பட்டது, செஞ்சிக்குத் தெற்கே பனமலைப் பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது. அதன் பின்னர் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட குகை கோயில் உருவாக்கப்பட்டது. இந்த இடம் செஞ்சியில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கி.பி.580 முதல் 630 வரை விசித்ரசித்தன் என அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் ஆளுகையில் செஞ்சி இருந்தது. மேலும் செஞ்சி கிழக்கு பகுதியில் காணப்படும் கல்வெட்டுகள், செஞ்சி பல்லவர்களின் காலத்திற்கு பின் சோழர்கள் ஆண்டதாகச் சொல்கிறது. தொடக்கத்தில், சோழர் ஆட்சிக்காலத்தில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறிய கோட்டை ஒன்று இங்கே இருந்தது. 1014-1190 களில், செஞ்சி பாண்டியர்களின் கையில் இருந்தததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
 
இங்கிருந்த சிறிய நகரமான செஞ்சியைப் பாதுகாப்பதற்காக, விஜயநகரப் பேரரசுக் காலத்தில், 13 ஆம் நூற்றாண்டில் விரிவாக்கப்பட்டது. அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை வலிமை பொருந்திய கோட்டையாக மாற்றினர். 13 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர் என்கிறது கல் வெட்டுக்குறிப்பு.  அதுமட்டுமல்ல தமிழ் நாட்டில் நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் செஞ்சி நாயக்கர்களின் தலைமையிடமாகவும் செஞ்சி விளங்கியதாக கல்வெட்டு செய்தி தெரிவிக்கின்றது
 
புராணப்படி பார்த்தால் செஞ்சி வந்ததிற்கான தெய்வீக தகவல் நம்மை ஆச்சர்யமூட்டுகின்றது
அனுமன் பர்வத மலையை இலங்கைக்கு தன் கையால் தூக்கிச் சென்றபோது அதிலிருந்து பிரிந்து விழுந்த சிறிய பகுதிதான் சிரஞ்சீவி மலை என்றும், அதுதான் காலப்போக்கில் செஞ்சி என்று மாறியதாகவும் புராணக்கதை  சொல்கின்றது
.
தேசிங்குராஜாவும் செஞ்சிக் கோட்டையும் 
 
ஷாஆலம் வாங்கிய ஒரு புதிய முரட்டு குதிரையை யாராலும் அடக்க முடியவில்லை அதனால் குதிரை ஓட்டுவதில் வல்லவர் ஆன சொரூப்சிங்கை தில்லிக்கு வர சொன்னார் சுல்தான், அவருக்கு துணையாக 18 வயதே ஆன ராஜாதேசிங்கும் சென்றான். தந்தையால் குதிரையை அடக்க இயலவில்லை எனவே தனக்கொரு  வாய்ப்பளிக்கும்படி   தேசிங்கு சுல்தானிடம் முறை இட்டான், வாய்ப்பளிக்கப்பட்டது .அனைவரும் வியக்கும் வண்ணம் அக்குதிரையை அடக்கி சவாரி செய்து எல்லோரையும் ஆச்சர்யமூட்டினான்
அக்குதிரையின் பெயர் பரிகாரி. தேசிங்கின் வீரத்தைப் பாராட்டி அக்குதிரையையே பரிசளித்தார்  சுல்தான். அது மட்டும் அல்ல.. இன்னொரு ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் தேசிங்கிற்கு மணமுடித்து வைத்தார். தேசிங்கின் மனைவி பெயர் ராணிபாய். இவர் பெயரால் உருவான ஊர்தான் ராணிப்பேட்டை..
செஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது. அந்த ஆலயத்தில் பள்ளிக்கொண்டிருக்கும்
ஸ்ரீ அரங்கன் தான் தேசிங்கு ராஜாவின் தெய்வம், எந்த வேலைச்செய்தாலும் இந்த அரங்கனிடம் சொல்லிவிட்டு தான் செய்வாராம். அதேப் போன்று எந்தப்போருக்குச்சென்றாலும்  அரங்கனிடம் உத்தரவு பெற்ற பின்பு தான் போருக்கு புறப்படுவாராம் ஒரு முறை ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட நேர்ந்தபோது... தன் குல தெய்வமான இந்த ஸ்ரீஅரங்கநாதரிடம் அனுமதி கேட்டாராம். அதற்கு ஸ்ரீஅரங்கன், "இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்" என்று கூறினாராம். தேசிங்கோ, "எதிரியின் படைகள் எல்லையை அடைந்துவிட்டது அதனால் ... முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன். இன்றே செல்லட்டுமா?" என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ஸ்ரீரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணும் போது இது உண்மை சம்பவமே என்பது புலப்படும்
 

செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளடங்கியுள்ளது. 240 மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி ஆகிய குன்றுகள் இருந்தன. இடையேயிருந்த வெளிகள் 20 மீட்டர்கள் அகலம் கொண்ட சுவர்களினால் மூடப்பட்டிருந்தன..
 
செஞ்சிக் கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

கோட்டையுள் அமைந்துள்ள கல்யாண மண்டபம் பிரமிப்பூட்டும் விதத்தில் அமைந்துள்ளது வெளியார் படையெடுப்பை முறியடிப்பதற்கு உகந்த இடமொன்றாகக் கருதியே இவ்விடத்தில் இக்கோட்டை கட்டப்பட்டது. மராட்டியர்களிடம் இருந்த இக் கோட்டையை பீஜப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின. இக் கோட்டையை கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய(மீட்ட) மராட்டிய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார்.
 
ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டான். பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களில் கைக்கு வந்தது. அவர்கள், 1750 இல் இதனை பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும் சிறிதுகாலம் இதனை ஹைதர் அலியும் கைப்பற்றி வைத்திருந்தான் என்கிறது கல்வெட்டு செய்தி
 
பல்வேறு படையெடுப்புகளை முறியடித்து காலத்தாலும் அழிக்கமுடியாத பொக்கிஷமாக காட்சி தருகிறது செஞ்சிக்கோட்டை. கடைசி மன்னராக செஞ்சிக்கோட்டையை ஆண்ட ராஜா தேசிங்கு வாழ்ந்த இடம், போரிட்ட இடம், மரணம் தழுவிய இடம், தேசிங்கின் மனைவி ராணிபாய் உடன்கட்டை ஏறிய இடம் என பார்த்து பரவசம் அடையும் வண்ணம் உள்ளது.
வியப்பில் ஆழ்த்தும் கட்டட கலைக்கு எடுத்தக்காட்டாக கலைநயத்துடன் கல்லில் கட்டப்பட்ட கம்பீரமான கட்டுமானத்தை கண்டு வியப்படையாதவர்களே இல்லை.
தேசிங்குராஜன் ஆட்சி செய்த 17-ம் நூற்றாண்டின் வரலாற்றின் காலத்திற்கே நம்மை அழைத்து செல்லும் இடமாக விளங்கி வருகிறது இந்த செஞ்சிக் கோட்டை.
கோட்டையைப் பார்த்து விட்டு வெளியே வந்த பின்பு தான் நாம் மீண்டும் இந்த நூற்றாண்டுக்கு திரும்பிவந்த உணர்வு ஏற்படும்

ராஜா கோட்டையின் கீழே பார்க்க வேண்டிய இடங்கள்
 
சிவன் கோயில், அம்மன் ஆலயம், வேலூர் வாயில், சாதத்துல்லாகான் மசூதி, பாண்டிச்சேரி வாயில், வெங்கடரமணர் ஆலயம், சுழலும் பீரங்கிமேடை, உளி வளிக்கும் கல் பட்டறை, கல்யாண மஹால், முகமதுகான் மசூதி, அரண்மணை வளாகம், பணியாளர்கள் தங்கும் அறை, கல்யாண மஹால், குதிரை லாயம், யானைக்குளம், ஆயுதக் கிடங்கு, உடற்பயிற்சி அரங்கம், வெடி மருந்துக் கிடங்கு, நெல் களஞ்சியம், வேணுகோபாலசுவாமி கோயில், ஜும்மா மசூதியின் கலை பாணி, தேசிங்குராஜன் உடல் எரியூட்டப்பட்ட இடம், ஏழு கன்னிமார் கோயில், சர்க்கரை குளம், செட்டிக்குளம், ஆஞ்சநேயர் கோயில், மரணக்கிணறு ஆகியவை பார்க்க வேண்டிய முக்கிய இடங்களாகும்.

இந்த விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க செஞ்சிக்கோட்டை கொத்தலங்களைப் பார்த்து, வரலாற்றை நேரில் பார்த்த அனுபவத்தை பெற்றிடுங்கள் .
இந்திய தொல்லியல்துறையின் முழு கட்டுப்பாட்டின்கீழ் உள்ள செஞ்சிக் கோட்டையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் சிலவற்றை செய்து பராமரித்து வருகிறது.

மனித ரத்தம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்!


விபத்து, இயற்கை பேரழிவு, தீவிரவாதிகள் தாக்குதல் மற்றும் போர்க்காலங்களில் ஏராளமானவர்கள் தங்கள் உயிரையும் உடைமைகளையும் இழக்கின்றனர். ஏராளமானவர்கள் உயிருக்கு பேராடுகின்றனர். சிலர் தங்கள் உறுப்புகளை இழக்கின்றனர். 


இப்படிபட்ட சூழ்நிலைகளில் அவர்களின் உயிரைக் காப்பாற்ற ரத்தம் அதிக அளவில் தேவைப்படுகிறது. சிலசமயம் தேவைக்கு ஏற்ப ரத்தம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ரத்த பிரிவு நோயாளிகளுக்கு பொருந்துவதில்லை. இதனாலும் அவர்களிள் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது. இதனால்தான் ரத்த தானம் உயிர்தானத்துக்கு இணையாக வர்ணிக்கப்படுகிறது.அப்பேர்பட்ட ரத்தம் பற்றிய அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வோமா?


ரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?


ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.

sep 21 - health blood.MINI

 


ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?


ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.


ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?


ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.


ரத்தத்தில் உள்ள “பிளேட்லட்’ அணுக்களின் வேலை என்ன?


உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்’ அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்’ போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.


பிளாஸ்மா என்றால் என்ன?


ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.


ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?


ரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது.


ரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன?


உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் “பம்ப்’ செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.


உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா?


ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! – மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம்.


உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?


எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.


ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?


நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.

+2, டிப்ளமோ தகுதிக்கு AIRPORTS AUTHORITY OF INDIA-வில் பணி வாய்ப்பு!



இந்திய விமான நிலையங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவும், அவற்றின் செயல்பாடுகளை துரிதப்படுத்தும் விதமாக கொண்டுவரப்பட்டதுதான் ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா. இந்த நிறுவனத்தின் பயர் சர்வீஸஸ் பிரிவில் காலியாக உள்ள 100 ஜூனியர் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: ஜூனியர் அசிஸ்டன்ட்


மொத்த காலியிடங்கள்:
100

வயது வரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.

sep 21 Airports-Authority-India.
சம்பளம்: ரூ.12,500 – 28,500

கல்வித்தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிகல், ஆட்டோமொபைல் அல்லது பயர் பிரிவில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். மேலும் 50 சதவீத மதிப்பெண்களுடன் +2 முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:


எழுத்துத் தேர்வு, பிஸிக்கல் மெஷர்மெண்ட், டிரைவிங் டெஸ்ட், எண்டியூரன்ஸ் டெஸ்ட் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்
:

ரூ.400. இதனை Airports Authority of India என்ற பெயரில் புது டில்லியில் மாற்றத்தக்கதாக வகையில் வங்கி வரைவோலையாக எடுத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை
:

www.airportsindia.org.in,  www.aai.aero  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Regional Executive Director, Airports Authority of India, Northern Region, Operational Office, Rangpuri, Gurgaon Road, New Delhi – 110037

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:    

15.10.2013 மேலும் உடற்தகுதி உள்ளிட்ட முழு விபரங்கள் அறிய www.airportsindia.org.in/employment_news/Advertisement_fire.pdf  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தண்ணீர்ப் பஞ்சத்தை சமாளிக்க தீர்வு சொல்லும் மாணவர்கள்!


நிலத்தடி நீரை சேமித்து தண்ணீர்ப் பஞ்சத்தைச் சமாளிக்க வழி சொல்கிறார்கள் சென்னைக் கல்லூரி மாணவர்கள்.

வீணாக சாக்கடையில் கலக்கும் மழைநீரை, பாதுகாத்து பத்திரப்படுத்தி பல்வேறு உபயோகங்களுக்குப் பயன்படுத்தினால் எப்படி இருக்கும்? கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. அதற்கான முயற்சிகளை யார் எடுப்பது?

சென்னை ஸ்ரீ சாராம் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். (சிவில்) படிப்பை சமீபத்தில் முடித்த மாணவர்கள் விக்னேஷ் சந்திரமௌலி, வி.வினோத், எஸ்.நவீன் குமார், ஜி.பிரபு ஆகியோர் ஒருங்கிணைந்து இதற்கான தீர்வைக் கண்டறிந்துள்ளனர்.

சென்னை நகர மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையிலான புராஜக்ட்டை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சியால், மாநிலம் முழுவதுமே நிலத்தடி நீர் வரத்து குறைந்தது. சென்னையில் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த ஆண்டு பெய்த மழையால், நீர் வரத்து அதிகரித்தபோதிலும், மழை நீர் சாலைகளில் வீணாக வழிந்தோடியதையும் பார்க்க முடிந்தது. அவ்வாறு வீணாகும் மழை நீர்  இறுதியில் கடலில் கலக்கிறது. தூய்மையான மழை நீரில், 70 சதவீதம் நீர் சாக்கடைகளிலும், சாலைகளிலும் வீணாகிறது. இவ்வாறு வீணாகும் நீரை சேமிக்க வழியுண்டா என்பது பற்றி யோசித்ததன் விளைவே, எங்கள் புராஜக்ட்டுக்கு அடித்தளமாக அமைந்தது" என்று விவரிக்கிறார் வினோத்.

மழை நீரை வீணாக்காமல், பயனுள்ள முறையில் சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் எங்கள் புராஜக்ட்டை உருவாக்கத் திட்டமிட்டோம். ரெய்ன் சென்டர் அமைப்பின் சேகர் ராகவனைச் சந்தித்தோம். அவரது ஆலோசனைப்படி, சென்னையில் நிலத்தடி நீர் மட்டத்தின் அளவை ஆராய்ந்தோம். இதற்காக பல்வேறு இடங்களைத் தேர்வு செய்தோம். வீடுகளில் மழை நீர் சேமிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு  முன்பு, நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு என்று இரண்டு கோணங்களில் எங்கள் ஆராய்ச்சியைத் துவக்கினோம். பெசன்ட் நகர், வேளச்சேரி, தி.நகர் போன்ற இடங்களில் மழை அளவையும், வடிகால் வசதிகளையும் ஆராய்ந்தோம். அப்போது எங்களுக்கு சில முடிவுகள் தெரியவந்தன..." என்று விவரிக்கின்றனர் வினோத்தும், பிரபுவும்.

எங்கள் ஆராய்ச்சியின்படி, கடுமையான பாறைகள் உள்ள பகுதி, களிமண் பகுதி, மணற்பாங்கான பகுதி என்று மூன்று வித்தியாசமான பிரிவுகள் இருப்பதை அறிந்தோம். பெசன்ட் நகர் பகுதி, மணல் அதிகமுள்ள பகுதியாகும், வேளச்சேரி, கடினமான பாறைகளாலான பகுதி. தி.நகர், களிமண் அதிகமுள்ள பகுதி. இப்படி, ஒவ்வொரு பகுதியிலும் அந்தப் பகுதி மண்ணின் தன்மைக்கேற்ப, நிலத்தடியை சீரமைத்து தண்ணீரைத் தேக்கி வைக்கும் வசதிகள் செய்யவேண்டும். எங்கள் புராஜக்ட்டின்போது வேளச்சேரியில் ஒரு தெப்பக்குளத்தைப் பார்த்தோம். 10 லட்சம் லிட்டர் நீரைத் தேக்கி வைக்கும் தன்மை கொண்ட அந்தக் குளத்தில் தேவையற்ற செடி, கொடிகள் பரவியிருந்தன. குளமே தெரியாத அளவுக்கு புதர் மண்டிக் கிடந்தது. இதுபோன்ற குளங்களையும், தண்ணீர் அமைப்புகளையும் கண்டறிந்து தூர் வாரும் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும்" என்கிறார்கள் நவீன்குமாரும், விக்னேஷ் சந்திரமௌலியும்.

களிமண் பகுதியான தி.நகர் போன்ற பகுதியில், விளையாட்டு மைதானம் போன்ற ஒரு பொது இடத்தில் சுமார் 6 அடி ஆழத்திற்கு ஒரு சிறிய கிணற்றைத் தோண்டி, அதில் ஒரு பைப்பை நிலத்தடியைத் தொடும்படி இணைக்க வேண்டும். வீணாகும் மழை நீரை இந்த கிணற்றை நோக்கித் திருப்பிவிடவேண்டும். மழை நீருடன் குப்பைகள், கண்ணுக்குத் தெரியாத துகள்கள் கலந்துவிடாமல் இருப்பதற்காக இந்த கிணற்றை, துளைகள் நிறைந்த ஒரு கான்கிரீட் ஸ்லாப்பால் மூடி விடவேண்டும். சாலைகளில் வீணாகும் மழை நீர் இந்த கிணற்றில் விழுவதால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். பெசன்ட் நகர் போன்ற மணற்பாங்கான பகுதிகளில், சாலையின் ஒரு ஓரத்தில் சிறிய அளவில் தண்ணீர் சேகரிப்புத் தொட்டியை அமைத்து, வீணாகும் நீரைச் சேமிக்கலாம். வேளச்சேரி போன்ற பாறைகள் நிறைந்த நிலத்தடியைக் கொண்ட பகுதியில், கோயில் குளம், தெப்பக்குளம் போன்ற குளங்களை தூர்வாரி, மழை நீர் சேகரிப்புத் தொட்டிகளாகப் பயன்படுத்தலாம்" என்கிறார்கள் வினோத்தும் அவரது நண்பர்களும்.

 

பழுத்த இலையும் பள்ளமும்! - (நீதிக்கதை)



ஒரு பெரிய மரம் ஒன்று இருந்தது..அம்மரத்தின் வேரருகே ஒரு பள்ளம் ஒன்றும் இருந்தது..


இலையுதிர் காலம் வந்தது...



மரத்தில் இருந்த இலைகள் பழுத்து கீழே விழ ஆரம்பித்தன.



அப்போது ஒரு பழுத்த இலை கீழே பள்ளத்தில் விழுந்தது...


அந்த இலை பள்ளத்தைப் பார்த்து ...என்னை உன் பள்ளத்தில் ஏற்றுக்கொள் இல்லாவிடில்...
அடிக்கும் காற்றில் நான் எங்கே போவேன் என தெரியாமல் அல்லாடுவேன் என்றது..




அந்த பழுத்த இலையால் தனக்கு என்ன லாபம் என்று கருதிய பள்ளம்"காப்பாற்ற முடியாது" என்று கூறி பழுத்த இலையை வெளியே தள்ளியது.



பெரும் காற்று அடிக்க இலை பறந்து எங்கோ சென்று விட்டது.



மற்றுமொரு நாள்..வேறொரு இலை பள்ளத்தில் விழுந்தது..மழை வேறு பெய்ய ஆரம்பித்தது..



உடனே பள்ளம்..      இலயைப் பார்த்து ..

'என்னை மூடிக்கொள்.. இல்லாவிடில் இந்த மழை நீர் என்னுள் நிரம்பி என்னை மூழ்கடித்துவிடும்..


மண் சரிந்து என்னை நீக்கிவிடும்' என்று கெஞ்சியது.

அதற்கு அந்த இலை

'அன்று என் சகோதர இலை உன்னை உதவி வேண்டிய போது நீ உதவவில்லை...
அதுவும் காற்றில் எங்கோ சென்று மறைந்துவிட்டது..
ஆனால் நீ உதவி கேட்கும்போது நான் உன்னைப்போல இருக்கமாட்டேன்'. 
என்று சொல்லிவிட்டு ..அந்த பள்ளத்தின் மேல்..அதை முழுவதுமாக மறைத்தது இலை.

மழை பெய்து ஓய ..பள்ளமும் காப்பாற்றப்பட்டது.பின் இலை பள்ளத்தைப்பார்த்து 'இனியும் உதவி என நம்மை நாடிவருபவருக்கு..
நம்மால் ஆன உதவியை செய்யவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்'என்றது.

நாமும் பிறருக்கு உதவி செய்வதை ஒரு குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்.